(செ.தேன்மொழி)
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் தொகை குறைந்து வருகிறது. இன்று காலை 6 மணி வரை 8 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது. இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகளாவர்.
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 5 அதிகாரிகள் உட்பட 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களில் 129 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 4228 பேர் குணமடைந்துள்ளனர். 8 பேர் மாத்திரமே கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் 4377 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 134 சிறைச்சாலை அதிகாரிகள், 487 ஆண் கைதிகள், 11 பெண் கைதிகள், 3511 ஆண் விளக்கமறியல் கைதிகள், 234 பெண் விளக்கமறியல் கைதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 886 பேரும், மெகசின் சிறைச்சாலையில் 868 பேரும், மஹர சிறைச்சாலையில் 814 பேரும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 434 பேரும் மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் 363 பேருமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment