ஜெனிவாவில் இலங்கையின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த புதிய பிரேரணையே தேவை - கவனமாக கையாளாவிட்டல் கொரோனா நெருக்கடியை விட மிக ஆபத்தான நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் : கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா - News View

About Us

About Us

Breaking

Sunday, January 31, 2021

ஜெனிவாவில் இலங்கையின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த புதிய பிரேரணையே தேவை - கவனமாக கையாளாவிட்டல் கொரோனா நெருக்கடியை விட மிக ஆபத்தான நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் : கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை இலங்கை அரசாங்கம் களைவதற்கு, போர் நிறைவின் பின்னரான படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் முதல் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக நீதிபதி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு வரையிலான உள்ளக செயற்பாடுகளை குறிப்பிட்டுக்கூறும் புதிய பிரேரணையொன்றே தற்போதைய சூழலில் அவசியமாக உள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான கலாநிதி. பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையை சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டிருக்கின்றார். இதனை எதிர்வரும் 24ஆம் திகதியன்றி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த நிலையில் அவர் இம்முறை வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலில் சிவில் நிருவாகத்தில் 28 படை அதிகாரங்களை இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் கூறியிருக்கின்றார்.

அத்துடன், 20ஆவது திருத்தச் சட்டத்தினால் ஏற்பட்டுள்ள அதிகாரக் குவிப்பு மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமல் போனமை, அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளமை, இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30.1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமை, விசேடமாக கலப்பு பொறிமுறையுடான நீதி விசாரணை முன்னெடுக்கப்படாமை, ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இவற்றில் இலங்கை விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த அறிக்கை கடந்த காலங்களில் வெளியான அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமானதுதான். இதனை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இல்லாது விட்டால் கொரோனா நெருக்கடியையும் விடவும் மிகவும் ஆபத்தான நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமைகள் உருவாகி விடும். 

இலங்கையில் நல்லிணக்கத்தினை மீளக் கட்டியெழுப்புதலில் காணப்பட்ட குறைகளை அடிப்படையாக வைத்தே இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே வடக்கு கிழக்கு மக்களுடான மீளிணக்க விடயங்களை தொடர்ச்சியான முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளை மையப்படுத்தாது அரசாங்கம் நேரடியாக தமிழ் மக்களுடனான ஊடாட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமையும் பின்னர் அது நிர்மாணிக்கப்பட்டமையும் அரசாங்கத்தின் மாறுபட்ட நிலையை வெளிப்படுத்தியுள்ளது. அதுபோன்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உட்பட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்வதற்காக நீதிபதி தலைமையிலான மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் இத்தகைய விடயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஜெனிவா வதிவிடப் பிரதிநிதி ஊடாக உரிய பிரசாரங்களை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

அதேநேரம், இலங்கை சார்பில் இம்முறை பிரித்தானியா, கனடா உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளே பிரேரணையை கொண்டுவரவுள்ளன. அந்த நாடுகளிடத்தில் மேற்படி விடயங்களை வெளிப்படையாக கலந்துரையாடுவதன் ஊடாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த முடியும்.

அவ்விதமான முயற்சிகளுக்கு அப்பால், உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் மேற்படி விடயங்களை மையப்படுத்தி இலங்கை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் பிரேரணையொன்றை கொண்டுவர முடியும். 

சீனா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் இணை அனுசரணை நாடுகள் அல்லாத மேற்குலக நாடுகள் ஆகியவற்றின் ஆதரவினைக் கோர முடியும். 

விசேடமாக காஷ்மீர் பிரச்சினையில் நெருக்கடியில் இருக்கும் இந்தியாவின் ஆதரவினையும் இலங்கை கோர முடியும். இந்தியாவின் ஆதரவினை பெறுவதானால் கணிசமான மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.

No comments:

Post a Comment