ஐ.நா. விடம் நான்கு கோரிக்கைகளை முன்வைக்கும் ஆவணத்தை இறுதி செய்தது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 6, 2021

ஐ.நா. விடம் நான்கு கோரிக்கைகளை முன்வைக்கும் ஆவணத்தை இறுதி செய்தது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை நோக்கி மூன்று கோரிக்கைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் போரவையின் உறுப்பு நாடுகளை நோக்கி ஒரு கோரிக்கை என்று நான்கு கோரிக்கைகளை மையப்படுத்திய ஆவணமொன்றை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இறுதி செய்துள்ளது.

இதில் அக்கூட்டணியின், பங்காளிக் கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அனந்தி சசிதரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தக் கோரிக்கை ஆவணம், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், சில புலம்பெயர் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்தரப்பினர் இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு கையொப்பமிடும் இடத்து விரைவில் ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரஸ், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் ஐ.நா.வுக்கான கோரிக்கை ஆவணத்தில்,

01. தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கில், புரியப்பட்ட இனப் படுகொலைகள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பொறுப்புக் கூறலுக்கான 2011ஆம் ஆண்டு அறிக்கை, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012ஆம் ஆண்டு அறிக்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் 2015ஆம் ஆண்டு வெளியான இலங்கை பற்றிய புலனாய்வு அறிக்கை ஆகியவற்றின் உள்ளடக்கங்களின் அடிப்படையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடமோ அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திடமோ பாரப்படுத்தல் வேண்டும்.

02. இலங்கையில் புரியப்பட்ட புரியப்படுகின்ற சகல குற்றங்களிலும் பாரதூரமான குற்றமாகிய இனப் படுகொலைக்குரிய தீர்ப்பினை வழங்குவதன் பொருட்டு, விசேட காப்பீட்டையும் விசாரணை வரையறையையும் கொண்ட “சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறை’ (ஐ.ஐ.எம்.) ஒன்றை தாபித்தல்.

03. மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் அடக்கலாக இனப் படுகொலைக்கு வித்திட்ட 1958ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களுக்கு எதிரான அடுத்தடுத்த வன்முறைகளுக்கு பங்களிப்புச் செய்த நீண்ட கால தமிழர் தேசிய பிரச்சினைக்கு ஓர் நிரந்த அரசியல் தீர்வினைக் காண்பதன் பொருட்டு வடக்கு மற்றும் கிழக்கில் சர்வதேச ரீதியில் ஒழுங்கு படுத்தப்பட்ட மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

04. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயன்முறைக்கு மேலதிகமாக, தமிழ் மக்களுக்கு எதிராக புரியப்பட்ட கொடிய குற்றங்களுக்கான இலங்கை அரசின் பொறுப்பு ஏற்படுத்துவதன் பொருட்டு நீதிக்கான சர்வதேச நீதிமன்றில் இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்வதில் ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் பங்குபற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம் ஆகிய நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment