நாட்டின் அனைத்து இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் இம்மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆனால் மேல் மாகாணத்தைப் பொறுத்தவரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தரம் 11 இற்காக மாத்திரம் ஜனவரி 25ஆம் திகதி திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன்போது இறுக்கமான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவிருக்கின்றன. பாடசாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி கல்வி அமைச்சு விரிவாக அறிவித்துள்ளது.
பாடசாலைக்கு வரும் போதும், பாடசாலையினுள்ளும் மற்றும் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் வரையும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதை மாணவர்களுக்கு வலியுறுத்துதல் வேண்டும்.
பாடசாலையினுள் நுழையும்போது உடல் வெப்பநிலையை பரிசீலித்தல் கட்டாயம்.
பாடசாலையினுள் நுழையும்போது கை கழுவுதல் மற்றும் காலணிகள் தொற்று நீக்கம் அவசியம்.
மாணவர்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வதை குறைப்பதற்காக பாடசாலையில் காணப்படும் மேலதிக நுழைவாயில்களை திறந்து பயன்படுத்தல்.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மீள அறிவிக்கும் வரை திறக்கப்படமாட்டாது.
ஒவ்வொரு பாடசாலையிலும் குறைந்தது ஒரு பாதுகாப்புக் கவச ஆடை மற்றும் முகக் கவசம் இருத்தல் வேண்டும்.
பாடசாலையில் கொவிட் அடையாளத்தில் மாணவர்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் மேற்படி ஆடைகளை அணிந்து கொண்ட பாடசாலை ஊழியர், அம்மாணவரை பாடசாலை ஓய்வு அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
பாடசாலை நடைபெறும் சந்தர்ப்பங்களில் வெளிநபர்களின் வருகையை முடிந்தளவு தவிர்த்தல்.
விசேட சந்தர்ப்பங்களில் 1390 க்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளல்.
இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சானது விரிவான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. கொவிட் நிலைமையின் மத்தியில் 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பாகவே கல்வி அமைச்சு இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது. மூன்று வகையான அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
1. பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான விரிவான வழிகாட்டல்.
2. பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான அதிபர்களுக்கான வழிகாட்டல்.
3. பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கான வழிகாட்டல்கள்.
ஒரு வகுப்பில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
15 வரை எனின் அனைத்து நாட்களும் வகுப்புகள் நடைபெறும். 16-30 எனின், இரண்டாக பிரித்து ஒரு வாரம் விட்டு மறு வாரம் வருமாறு இரண்டு பிரிவுகளுக்கும் மாறி மாறி வகுப்புகள் நடைபெறும்.
30 க்கு மேல் எனின் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆக வருமாறு பிரித்து சம சந்தர்ப்பங்கள் வருமாறு வகுப்புகள் நடைபெறும்.
பாடசாலை பிரதான மண்டபம், விரிவுரை மண்டபம் போன்றவற்றில் பொருத்தமான மாணவர் இடைவெளி பேணும் வகையில் அதிக மாணவர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்தலாம். இதேபோன்று கருத்தரங்குகள் நடத்தவும் அனுமதி உண்டு.
மாணவர்கள் முகத்துக்கு முகம் பார்க்காதவாறு வகுப்பறை ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
பாடசாலை இடைவேளை நேரத்தை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் வராத வண்ணம் ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
மாணவர்கள் உணவுகளை பரிமாறிக் கொள்வதை தவிர்ப்பதை ஆசிரியர்கள் கண்காணித்தல்.
பாடசாலை இடைவேளைகளிலும் மாணவர்கள் தமது தனி நபர் இடைவெளிகளை பேணல் வேண்டும்.
முகக் கவசம் அணிதல் வேண்டும்.
மாணவர்கள் முடியுமான வரை வீட்டிலிருந்து உணவு கொண்டு வருதல்.
மாணவர்கள் முடியுமான வரை பெற்றோரின் சொந்த வாகனங்களில் வரல்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் திட்டமிட்டுக் கொள்ளல்.
பொதுப் போக்குவரத்து பயன்படுத்துபவராயின் அல்லது பாடசாலை போக்குவரத்து வாகனங்களில் வருவதாயின் ஆசன எண்ணிக்கைக்கு அளவாக பயணித்தல்.
ஏறும் போதும் இறங்கும் போதும் கைகளை சனிடைசர் மூலம் கழுவிக் கொள்ளல்.
முகத்தை தொடுவதை தவிர்த்தல்.
வாகன யன்னல்கள் திறந்த நிலையில் பயணித்தல்.
ஏ.சி தவிர்த்தல்.
முகக் கவசம் அணிதல் மற்றும் வாகனத்தில் உணவு உட்கொள்வதை தவிர்த்தல்.
பாடசாலை விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொடர்பாக பின்னர் அறிவித்தல்கள் வழங்கப்படும்.
ஆசிரியர்கள் கொவிட் நிலைமைகளில் இருந்து தம்மையும் மாணவர்களையும் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ளல் வேண்டும்.
கொவிட் நிலைமை தொடர்பாக மாணவர்களை தைரியப்படுத்தல்.
கொவிட் தொடர்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வழிகாட்டல்களும் ஆசிரியர்களால் பின்பற்றப்படல் வேண்டும்.
பாடசாலை சுகாதார அபிவிருத்தி வேலைகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கல் வேண்டும்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அவர்களின் மனத்தைரியத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
மாணவர்களின் இடைவெளி இருக்கும் சந்தர்ப்பங்களில் முகக் கவசத்தை அகற்ற சந்தர்ப்பம் வழங்கல்.
மாணவர்கள் மேலதிக முகக் கவசங்களை வைத்திருத்தல் வேண்டும்.
மாணவர்கள் சனிட்டைசர் கொண்டு வரலாம்.
தொடர்ந்து முகக் கவசம் அணிவதில் சிரமம் கொண்ட மாணவர்கள் 'ஃபேஸ் ஷீல்ட்' பயன்படுத்தலாம்.
உண்ணும் போது முகக் கவசத்தை கழற்றும் சந்தர்ப்பங்களில் அதை வைக்க பிரத்தியேக பையை பயன்படுத்தல். அல்லது ஆடையில் மாட்டிக் கொள்ளல். பொது இடங்களில் வைப்பதை தவிர்த்தல்.
மாணவர்கள் நோய் அறிகுறிகள் இருப்பின் பாடசாலைக்கு வருவதை தவிர்த்தல்.
வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு யாதும் ஒரு நபர் உட்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் குறித்த மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல்.
பீ.சீ.ஆர் அல்லது என்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்கள் குறித்த பரீட்சை பெறுபேறு வரும் வரை பாடசாலைக்கு வராதிருத்தல்.
தனிமைப்படுத்தல் பிரதேச மாணவர்கள் பாடசாலைக்கு வராதிருத்தல்.
நிகழ்நிலை கற்றலை விட நேரடி கற்றல் வினைத்திறனானது என்பதை பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறித்தல்.
இதேவேளை பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பாக அதிபர்களுக்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.
6/7/8/9 மற்றும் 10 ஆம் திகதிகளில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களை அழைத்து பாடசாலை மீள ஆரம்பித்தல் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கடமையாற்றல் தொடர்பாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பொது சுகாதார பரிசோதகருடன் இணைந்து அறிவுறுத்தல் பெற்றுக் கொள்ளல்.
15/2020 சுற்றறிக்கைக்கு ஏற்ப செயற்படல்.
அவசர தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கங்களை காரியாலத்தில் காட்சிப்படுத்தல் மற்றும் ஏனையோருக்கு அது தொடர்பாக அறிவுறுத்தல்.
பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்காக பின்வரும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆசன எண்ணிக்கைக்கு அளவாக மாத்திரம் மாணவர்களை அமர்த்தல்.
ஏறும் போதும் இறங்கும் போதும் கைகளை கழுவுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தல்.
யன்னல்களை திறந்த வண்ணம் பயணித்தல்.
ஒவ்வொரு நாளும் ஒரே குழுவினரை பயணிக்க எடுத்தல்.
ஒரே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களை ஒரே வாகனத்தில் ஏற்றல்.
நாள் தோறும் பயணிக்கும் மாணவர்கள் தொடர்பான தகவல்களை வைத்திருத்தல். அவர்களின் தினந்தோறும் வருகை தொடர்பான ஆவணங்கள் வைத்திருத்தல். வெளிநபர்களை ஏற்றாதிருத்தல்.
மாணவர்கள் காலையில் ஏறும் போது நோய் அறிகுறிகள் இருக்கின்றதா என்பதை அவதானித்தல்.
சாரதி, நடத்துனர் எப்போதும் முகக் கவசம் அணிந்திருத்தல்.
அவசர நிலைமைகளில் தொடர்பு கொள்ள வேண்டிய சுாதாரத் துறை இலக்கங்களை காட்சிப்படுத்தல்.
ஒரே ஊழியர்களை தொடர்ச்சியாக பயன்படுத்தல்.
நோய் அறிகுறிகள் இருக்கும் ஊழியர்களை பயன்படுத்தாதிருத்தல்.
இவ்வாறான நடைமுறைகளுடன் ஆரம்பமாகவிருக்கின்ற பாடசாலைகள் 2021 இல் எவ்வித இடர்பாடுகளுமின்றி தொடர வேண்டும் என்பதே அனைவரதும் அவாவாக உள்ளது.
வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு நிருபர்)
No comments:
Post a Comment