நீர்கொழும்பை அண்டிய, இலங்கையின் மேற்குக் கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கையின் போது ரூபா 60 கோடி பெறுமதியான ஐஸ் மற்றும் ஹசீஷ் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (04) நீர் கொழும்பு கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி படகொன்றில் கொண்டு சென்ற 100 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருள் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 80 கிலோ கிராம் ஹசீஷ் போதைப் பொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இதன்போது குறித்த படகிலிருந்து 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நீர்கொழும்பு கடற்பரப்பில் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிப் படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அதில் 9 மூடைகளில் நுட்பமாக மறைக்கப்பட்டு கொண்டு சென்ற 100 கிலோ கிராமுக்கும் அதிக ஐஸ் போதைப் பொருள் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 80 கிலோ கிராம் ஹசீஷ் போதைப் பொருளுடன் பல நாள் மீன்பிடி படகுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெருமதிப்பு ரூபா. 600 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நாட்டின் அனைத்து உளவுத்துறை சேவைகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் பணியகத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், சிலாபம், தொடுவாவ பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு இலங்கை விமானப்படையும் உதவியது.
சமூகத்திலிருந்து போதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்தி கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதுக்காக இலங்கை கடற்படை அடிக்கடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது
அண்மையில் இவ்வாறு போதைப் பொருட்களைக் கொண்டு செல்ல பயன்படுத்திய பல நாள் மீன்பிடிப் படகொன்று காலி, தொடங்தூவ கடல் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், போதைப்பொருள் மற்றும் பல நாள் மீன்பிடிப் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இலங்கை கடல் பகுதியில் நடக்கும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
No comments:
Post a Comment