(எம்.மனோசித்ரா)
கொவிட் தடுப்பிற்கான தடுப்பூசியை முதற்கட்டமாக வழங்கும் போது அதில் '1990 சுவசெரிய' அம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளடக்கப்படுவார்கள். கொவிட்-19 கட்டுப்படுத்தலுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடும் குழுக்களில் இவர்களும் பிரதான பங்கினை வகிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவிலுள்ள 1990 சுவசெரிய நிலையத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் 1990 சுவசெரிய நிலையத்திலுள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடி அங்குள்ள குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
கொவிட் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய போக்கு வரத்துக்கான வாகனங்களில் அம்புலன்ஸ் வண்டிகள் 297 மற்றும் சாரதிகள் உள்ளிட்ட 1,399 ஊழியர்கள் காணப்படுகின்றனர். சுவசெரிய நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 5,300 தொலைபேசி அழைப்புக்கள் வருவதோடு, இதுவரையில் ஒட்டு மொத்தமாக 3,424,590 தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன.
சுவசெரியவினூடான சேவையொன்றுக்கு நாளொன்றுக்கான செலவு 5,332 ரூபாவாகும். எனினும் அந்த சேவை பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 10 மாதங்களில் 1,500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment