பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைவடையக் காரணம் இணக்க அரசியல் வெளிப்பாடு என காரைதீவுப் பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று (26) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் 22 இலிருந்து குறைவடைந்து, 16 ஆகி இன்று 10 வரை குறைவடையக் காரணம் இணக்க அரசியலை மேற்கொண்டமையாகும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் உங்களை (முஸ்லீம்கள்) நம்பி ஏமாந்தது போதும். எமது முதுகில் ஏறிச்சவாரி செய்வதை நிறுத்துங்கள். இனியும் ஏமாற நாம் தயாரில்லை. சிங்கள, முஸ்லீம் மக்களுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம்.
எமது உரிமைகளை சலுகைகளாகக் கேட்பதை நிறுத்துங்கள். 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட 40 ஆயிரம் தமிழ் மக்கள் பல வருடங்களாக அரசியலுக்கப்பால் அதிகாரிகளை நம்பி ஏமாந்துள்ளனர்.
ஆகையினால், எம்முடன் இணைந்து வாழ விரும்பினால் விட்டுக் கொடுக்க வேண்டும். தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுக்கக்கூடாது.
சட்டம், நீதி என்பது ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகவே முஸ்லீம் அரசியல்வாதிகள் அரசுடன் இணைந்து செயற்படுகின்றனர் என்றார்.

No comments:
Post a Comment