தனிமைப்படுத்தல் தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் - அட்டலுகமயால் முழு களுத்துறை மாவட்டத்துக்கும் அபாயம் ஏற்படுவதை இடமளிக்க முடியாது : இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

தனிமைப்படுத்தல் தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் - அட்டலுகமயால் முழு களுத்துறை மாவட்டத்துக்கும் அபாயம் ஏற்படுவதை இடமளிக்க முடியாது : இராணுவத் தளபதி

(எம்.மனோசித்ரா)

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்கப்படாத பகுதிகள் என்பவற்றில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் எண்ணக்கை தொடர்பில் வார இறுதி நாட்களில் மதிப்பிட்டு தனிமைப்படுத்தல் தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை மற்றும் முடக்கப்படாத பகுதிகளில் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமை என்பவற்றால் தனிமைப்படுத்தல் குறித்து எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பது குறித்து விளக்கமளிக்கும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்கப்படாத பகுதிகளில் எவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள் என்பதை வார இறுதி நாட்கள் வரை மதிப்பிட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் குறித்து தீர்மானிக்கப்படும்.

அத்தோடு அடுத்த வாரமளவில் முடக்கப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய ஞாயிற்றுக்கிழமை காலை தனிமைப்படுத்தல் குறித்த தீர்மானத்தை எடுக்கக் கூடியதாகவிருக்கும்.

அட்டலுகம பிரதேசத்தில் முதலாவதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதே அந்த பிரதேசம் அபாயம் மிக்கது என்றும், அங்குள்ள மக்கள் இதனை விட கூடுதலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தோம். அங்குள்ள மக்கள் முதலாவது தினத்திலேயே எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். ஆனால் நால்வரில் ஆரம்பித்து இன்று (நேற்று) 329 ஆக உயர்வடைந்துள்ளது. 

எனவே இப்போதாவது அப்பகுதி மக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்காவிட்டால் அட்டலுகம பிரதேசத்தை நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். குறித்த ஒரு பிரதேசத்தினால் முழு களுத்துறை மாவட்டத்துக்கும் அபாயம் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

இவ்வாறு ஒரு சிலர் பொறுப்பற்று செயற்படுகின்ற போதிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புக்களில் உள்ள மக்கள் எமக்கு பாரியளவில் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றனர். 

இவ்வாரம் தொடர்மாடி குடியிருப்பொன்றில் மேற்கொள்ளப்பட்ட 300 பி.சி.ஆர். பரிசோதனைகளில் 4 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்கள் காணப்படுமாயின் அவற்றை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment