(ஆர்.ராம்)
மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பான பொறுப்புக்கூறலிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகாதவாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருடன் நேற்று புதன்கிழமை பிற்பகல் சுமார் 45 நிமிடங்கள் கொழும்பில் உள்ள ஐ.நா.வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்கண்ட வலிறுத்தலைச் செய்துள்ளார்.
இந்தச்சந்திப்பு தொடர்பாக மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணை அணுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதற்கான அவகாசங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் அச்செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானம் சம்பந்தமாக எதிர்மறையான பிரதிபலிப்புக்களையே செய்துள்ளது. ஆகவே முதலில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலில் இருந்து வெளியேறாதவாறான பிரேரணையொன்று கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும்.
அத்துடன், பொறுப்புக்கூறல் தொடர்பில் வலுவான பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் நிலஅபகரிப்புரூபவ் வலிந்து காணாலமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றகரமான நிலைமைகள் காணப்படவில்லை. ஆகவே இந்த விடயங்கள் அனைத்தையும் கரிசனை கொண்டு ஐ.நா தொடாந்தும் தமது செயற்பாடுபாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதன்போது பதிலுக்கு கருத்துரைத்த ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போது புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள், காணமலாக்கப்பட்டவர்கள் பற்றிய ஆராய்வதற்கான அலுவலகம்ரூபவ் மற்றும் ஆணைக்குழுக்களுக்கான புதிய நியமனங்கள் தொடர்பில் எம்மிடத்தில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
அவர்கள் மந்தகதியில் உள்ள விடயங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் சில வெளிப்பாடுகளைச் செய்துள்ளனர். ஆகவே நடைமுறைச்சாத்தியமான விடயங்கள் தொடர்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். எவ்வாறெனினும் பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியாக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மீண்டும் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவர்கள் (அரசாங்கம்) ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களை செய்தமை உள்ளிட்ட விடயங்களை கூறினாலும் பொறுப்புக்கூறப்படுவதற்கான எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளும் அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்டதாக இல்லை.
ஆகவே அவர்களின் வெவ்வேறு தளங்களில் மாறுபட்ட வகையில் பிரதிபலிக்கின்றார்கள். எனவே புதிய பிரேரணையொன்றே அடுத்த அமர்வில் சாத்தயமாக இருப்பதாக அதிகளவில் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அந்த பிரேரணையில் பொறுப்புக்கூறலுக்கான வலுவான விடயங்களை உள்ளீர்க்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
மேலும், பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் நாம் அந்த மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் செயற்பட்டு வரும் நிலையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் சாத்தியமான விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment