தாய்வானில் 253 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா - வைரஸ் பரவ காரணமான விமானி பணி நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

தாய்வானில் 253 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா - வைரஸ் பரவ காரணமான விமானி பணி நீக்கம்

தாய்வானில் 253 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது வைரஸ் பரவ விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு விமானிதான் காரணம் என கூறப்படுகிறது.

தென்சீன கடல் பரப்பில் தீவுக்கூட்டங்களுடன் அமைந்துள்ள நாடு தாய்வான். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நாட்டில் வைரஸ் தொற்றை வெகுவாக குறைத்து உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறது.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக அந்நாட்டில் மொத்தமாக இதுவரை 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதிக்கு பின்னர் அந்நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையில், வைரஸ் பாதிப்பு குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகளுடன் வெளிநாடுகளுக்கான விமான போக்கு வரத்து அனுமதிக்கப்பட்டது. அதன்படி, தாய்வான் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் கடந்த 12ம் திகதி அமெரிக்காவில் இருந்து தாய்வான் வந்தது.

அந்த விமானத்தில் நியூசிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 2 பேர் விமானிகளாக பணியாற்றி வந்தனர். இதற்கிடையில், அந்த விமானத்தில் பணியாற்றி வந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த விமானி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் விமான பயணத்தின்போது முகக் கவசம் உட்பட எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை. இதனால், அவருக்கு சளி, இருமல் என கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.

ஆனால், தாய்வான் வந்தடைந்த பின்னரும் நியூசிலாந்து விமானி தனக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கும் தகவலை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். மேலும், அவர் தாய்வானின் பல்வேறு சந்தைப் பகுதிகளுக்கும் சென்றுள்ளார்.

இந்நிலையில், தாய்வானில் உள்நாட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் உறுதி செய்தனர். அந்த பெண்மணிக்கு எப்படி கொரோனா பரவியது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த பெண் தாய்வான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றிவந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த விமானியை சமீபத்தில் சந்தித்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த விமானி கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மேலும், அவருடன் பணியாற்றிவந்த சக ஊழியரான ஜப்பான் விமானிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, நியூசிலாந்து விமானியிடன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் அமெரிக்காவில் இருந்து வரும்போதே கொரோனா அறிகுறிகள் இருந்ததையும், அதை தாய்வான் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் அந்த விமானி மறைத்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால், உண்மையை மறைத்த குற்றத்திற்காக அந்த விமானிக்கு 10 ஆயிரத்து 600 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீறியதாகவும், நிறுவனத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்து விதத்தில் நடந்து கொண்டதற்காவும் நியூசிலாந்து விமானியை தாய்வான் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்தது.

253 நாட்களுக்கு பின்னர் உள்ளூர் நபரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா பரவ காரணமாக கூறப்படும் நியூசிலாந்து விமானியும், அவரால் பாதிக்கப்பட்ட ஜப்பான் விமானியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூர் பாதிப்பு ஏற்பட்டபோதும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தாய்வான் அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment