ரெம்டிசிவர் (Remdesivir) மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து உலக சுகாதார ஸ்தாபனம் நீக்கியுள்ளது.
கொரோனா வைரசுக்கான சிகிச்சையில் ரெம்டிசிவர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்து கொரோனா நோயாளிகளை குறைவான நாட்களில் குணப்படுத்துவது கடந்த ஆய்வுகளில் தெரியவந்து.
இந்த மருந்து உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மிகவும் விலை உயர்ந்த ரெம்டிசிவர் மருந்தை உலகம் முழுவதும் 50 க்கும் அதிகமான நாடுகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது இந்த மருந்தையும் பயன்படுத்தினார்.
இந்நிலையில், ரெம்டிசிவர் மருந்தை மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து உலக சுகாதார ஸ்தாபனம் இன்று (20) நீக்கியுள்ளது.
ரெம்டிசிவர் மருந்து எடுத்துக் கொண்ட 7 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த மருந்து எடுத்துக் கொண்டதால் கொரோனா நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது அல்லது வெண்டிலேட்டர் உதவியுடனான சிகிச்சையை குறைக்கிறது என நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
ரெம்டிசிவர் மருந்தால் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள், பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் என எந்த தரப்பு கொரோனா நோயாளிகளும் பயன் அடைவதில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ரெம்டிசிவர் மருந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment