(க.பிரசன்னா)
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பழைய பஸ்களை திருகோணமலை கடற்பகுதியில் நீரில் மூழ்கடிக்கும் செயற்பாடு இன்று இடம்பெற்றிருந்தது.
கடலில் குப்பைகள் சேர்வதை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டிருக்கும் நிலையில் கடல் வளங்களை பாதுகாப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது வழமையாகும்.
இதற்கு முன்னரும் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிய கப்பல்கள் மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குண்டு துளைக்காத வாகனங்கள் என்பன நீர்கொழும்பு கடற்பரப்பில் நீரிழ் முழ்கடிக்கப்பட்டுள்ளன.
இவற்றை திருத்துவதற்கு அதிக செலவுகள் ஏற்படும் என்பதாலும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதும் வழமையானதாகும்.
சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகவே இச் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஆழ்கடலில் இந்த கப்பல் மற்றும் வாகனங்கள் மூழ்கடிக்கப்பட்ட பகுதியில் அவை, சிப்பிகள் உட்பட கடல் வாழ் உயிரினங்களை ஈர்க்கும் செயற்பாடுகளுக்கு வழியேற்படுத்தும். அதேவேளை அந்தப் பகுதிகைளை எதிர்காலத்தில் ஒரு சுற்றுலாப் பயணத்துக்கான இடமாக மாற்றவதற்கும் வழியேற்படும்.
உலகளவில் 3 மில்லியனுக்கும் அதிகமான கப்பல்கள் விபத்துக்களின் காரணமாக கடலில் மூழ்கிக் கிடப்பதாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் இன்று அவை பிரபலமான சுற்றுலாத்தளங்களாகவும் கடல் வளங்களை பாதுகாக்கும் செயன்முறைக்கும் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment