நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை ஆகியனவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 கொரோனா தொற்றுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் நோய்த் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை குற்றவியல் சட்டத்தின் 262 சரத்தின் பிரகாரம் ஆறு மாத கால சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட முடியும் என அவர் தெரிவித்தார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் வேண்டுமென்றே நோய்த் தொற்றை ஒருவர் பரப்பினால் குற்றவியல் சட்டத்தின் 263ம் சரத்தின் அடிப்படையில் 2 ஆண்டுக் கால சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் சட்டத்தை மீறினால் அவர் தனது தொழிலை இழப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றைத் திட்டமிட்ட அடிப்படையில் வேண்டுமென்றே பரப்பி அதனால் ஒருவர் உயிரிழந்தால் குற்றவியல் சட்டத்தின் 298ம் சரத்தின் பிரகாரம் ஐந்தாண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட முடியும் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment