கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் ரயில் சேவையினை பயன்படுத்தும் பொது பயணிகளின் சுகாதார பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலில் காணப்படுகிறது. சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு அம்சங்கள் ரயில் சேவையில் முழுமையாக செயற்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலை தொடருமாயின் கொவிட்-19 வைரஸ் பரவலின் மூன்றாம் அலை ரயில் சேவையாக பெயர் பெறும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலர் கசுன் சாமர தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் முதலாம் அலையினை காட்டிலும் தற்போது வெகுவிரைவாக பரவலடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் கடந்த வாரம் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. சுகாதார அமைச்சு வெளியிட்ட சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் ரயில் சேவை ஆரம்பிக்கவில்லை. ரயில் சேவையில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இதர புகையிரத சேவையாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் ஏனைய சுகாதார உபகரணங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ரயிலில் பயணிகள் ஒரு மீற்றர் தூர இடைவெளியில் பயணம் செய்யவில்லை. இவ்வாறான நிலையில் பொது பயணிகளின் சுகாதார பாதுகாப்பு சவாலுக்குள்ளாகும்.
ரயில் சேவையில் நவீன தொழினுட்ப வசதிகளை செயற்படுத்துமாறு திணைக்களத்துக்கு செயற்திட்டங்களை சமர்ப்பித்தோம். ஆனால் இதுவரையில் சாதகமான நடவடிக்கைகள் ஏதும் முன்னைடுக்கப்படவில்லை. குறைப்பாடுகளுக்கு மத்தியில் ரயில் சேவை நடைமுறைப்படுத்தினால் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் மூன்றாம் சுற்றின் மூல்பரவல் ரயில் சேவை என பெயர் பெறும் என்றார்.
No comments:
Post a Comment