(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் காலத்தில் எவ்வாறு விவசாயம் வளர்ச்சி பெற்றதோ அதேபோல் மீண்டும் எமது விவசாயத்தை மீட்டெடுப்போம், அடுத்த நான்கு ஆண்டுகளில் விவசாய புரட்சியின் மாற்றம் தெரியும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், விவசாய துறையில் மாற்றமில்லாத கொள்கை ஒன்றினை உருவாக்கவே நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஆட்சிக்கு ஆட்சி தீர்மாங்களை மாற்றாது விவசாயக் கொள்கையை நிராகரித்து உறுதியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கிறோம்.
அதேபோல் விவசாயம் தொடர்பான எந்தவித தரவுகளும் எமது அமைச்சில் இல்லை, விவசாய தன்மைகள், விவசாயிகளின் நிலைமைகள் என அனைத்து தரவுகளையும் சேர்க்க வேண்டும்.
அத்துடன் விவசாயிகளுக்கான நிர்ணய விலை ஒன்று தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு விளைச்சல் பொருட்களுக்கும் விவசாயியை பாதுகாக்கும் நிர்ணய விலையை இனியாவது உருவாக்க வேண்டும் என்றே நாம் அதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளோம்.
கடந்த ஆட்சியில் தேசிய உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு உணவுக்காக வெளிநாட்டை நம்பி வாழ வேண்டிய நாடாக மாற்றினீர்கள். அதனை நாம் மீண்டும் எமது தேசிய உற்பத்திக்காக மாற்றுகின்றோம்.
தேசிய உற்பத்திக்கான விதை உற்பத்தி நிறுவனங்கள் மூன்று இலங்கையிலேயே உருவாக்கப்போகின்றோம். 2023 ஆம் ஆண்டில் 16 வகையான விதைகளை நாமே உற்பத்தி செய்து எமக்கான உற்பத்தியை பலப்படுத்துவோம்.
அத்தியாவசிய உணவுகளை இறக்குமதி செய்து நுகர நாம் விரும்பவில்லை. அதற்காகவே எமது விவசாயிகளை மூன்று ஆண்டுகளில் பாதுகாப்போம். எஞ்சியுள்ள நான்கு ஆண்டுகளில் நாம் மாற்றத்தை செய்து காட்டுவோம்.
அடுத்த ஆண்டு இவ்வாறான விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மாற்றங்கள் விளங்கும். அதுவரை அமைதியாக அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு தாருங்கள். சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் காலத்தில் எவ்வாறு விவசாயம் வளர்ச்சி பெற்றதோ அதேபோல் மீண்டும் எமது விவசாயத்தை மீட்டெடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment