வீடுகளில் மரணிப்பவர்கள் தொடர்பில் செயற்பட வேண்டிய முறையான வழிகாட்டல் தேவை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 16, 2020

வீடுகளில் மரணிப்பவர்கள் தொடர்பில் செயற்பட வேண்டிய முறையான வழிகாட்டல் தேவை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

வீடுகளில் மரணிக்கும் நபர்களின் சடலங்கள் தொடர்பில் செயற்பட வேண்டிய முறை தொடர்பாக வழிகாட்டல் ஒன்றை சுகாதார அமைச்சு சுகாதார அதிகளுக்கு விரைவாக வழங்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக சங்கத்தின் முன்னாள் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவிக்கையில், வீடுகளில் மரணிக்கும் நபர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என சோதித்து பார்ப்பதற்காக அந்த சடலங்களை பி.சி.ஆர். பரிசோதனைக்காக அனுப்புவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் நல்லதாக இருந்தாலும் அது தொடர்பாக நடைமுறை பிரச்சினைகள் பல தற்போது எழுந்துள்ளன.

வீடுகளில் இருக்கும் வேறு நோய்களால் அவதிப்பட்டுவருபவர்கள் மரணித்த பின்னர் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், இதன்போது சுகாதார சேவையாளர்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் முறையான வழிகாட்டல்கள் எதுவும் இல்லை.

வீடுகளில் மரணிக்கும் நபர்களின் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய முறை, குறித்த நபரை வைத்தியசாலைக்கு எவ்வாறு எடுத்துச் செல்வது, பி.சி.ஆர். பரிசோதனைக்கு தேவையான மாதிரியை வீட்டில் இருந்து பெற்றுக் கொள்வதா அல்லது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதா, அவ்வாறு எடுத்துச் செல்வதாக இருந்தால் எந்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வது, எடுத்துச் சென்ற பின்னர் பி.சி.ஆர். அறிக்கை வரும் வரை குறித்த சடலத்தை எவ்வாறு வைத்துக் கொள்வது போன்ற நடைமுறைப் பிச்சினைகள் தற்போது கீழ் மட்டத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கின்றன.

அதனால் இது தொடர்பாக விரைவாக வழிகாட்டல் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். அவ்வாறு முறையான வழிகாட்டல் வழங்கப்படாவிட்டால், குறித்த சடலங்களை அங்குமிங்குமாக கொண்டுசெல்லும்போதும் நோய் பரவும் அபாயம் இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment