(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டில் கொராேனா தொற்று பரவுதல் தீவிரமடைந்துள்ள நிலையில் சில பிரதேசங்களில் வீடுகளில் வேறு நோய்களுக்கு பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களிடமும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையிலே எவ்வாறான மரணங்களில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வைத்தியசாலைகளில் மரணிப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொராேனா தொற்றாளரின் நெருக்கமானவர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர் மரணித்தால் மாத்திரம் அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு அப்பாட்பட்டு மரணிக்கும் மரணங்களில் பி.சி.ஆர். மேற்கொள்ள தேவை இல்லை.
இதேவேளை, வீடுகளில் யாரேனும் மரணித்தால் அந்த நபரின் மரணம் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட மரணம் அல்ல என்பதை உறுதிப்படுத்திய பின்னர் மாத்திரம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்து, பதிவாளர் நாயகத்தினால், பிறப்பு, இறப்பு பதிவுகளை மேற்கொள்ளும் பதிவாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் இந்த அறிவிப்பு சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தாமல் அறிவிக்கப்பட்டுள்ளதொன்று என்பதுடன் வீடுகளில் ஏற்படும் மரணம் ஒன்றை பதிவு செய்யும் இந்த முறைமையை திருத்தியமைக்குமாறு சுகாதார அமைச்சினால் பதிவாளர் நாயகத்துக்கு அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment