பேலியகொடை புதிய மெனிங் சந்தையின் நடவடிக்கைகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மெனிங் சந்தைக்கு அண்மித்த பகுதிகளில் கெரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் புறக்கோட்டை மெனிங் சந்தையினை பேலியகொடவுக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
பேலியகொட பகுதியில் புதிய மெனிங் சந்தையினை உருவாக்குவதற்கான கட்டுமான நடவடிக்கைகள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் பணிகள் நிறைவடையுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள சந்தையின் அனைத்து பிரிவுகளிலும் குறிப்பிட்டளவு வர்த்தகர்களை மாத்திரம் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினரின் பரிந்துரைக்கமைய, ஏனைய வர்த்தகர்களை சந்தைக்குள் அனுமதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் என்.கே.ரணவீர தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு நட்புறவான வாகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த சந்தை வளாகமானது, முழுமையாக இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பணி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. குறித்த வளாகத்துக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்கக்கூடிய சூரிய மின்கலங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வளாகம் ஐந்து தொகுதிகளை உள்ளடக்கியுள்ளதுடன் ஒரு வளைவு மற்றும் உயர்த்தப்பட்ட பாதை வசதிகளையும் கொண்டுள்ளது.
இரண்டு தொகுதிகளுக்கும் இடையில் பாலம் இணைப்பு வசதிகளையும் உள்ளடக்கியுள்ளதுடன் கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்தவுடன் முழு சந்தை வளாகமும் 446,734 சதுர அடி (25 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டிருக்கும்.
புதிய வளாகம் 1200 க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டிருப்பதுடன் மேலும் விற்பனையாளர்களுக்கு விசாலமான, தூய்மையான வளாகங்கள், சேமிப்பு, வாகன நிறுத்துமிடம் மற்றும் கழிவு முகாமைத்துவத்துக்கு சிறந்த வசதிகளை வழங்கும் வகையில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment