(செ.தேன்மொழி)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்து ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. ஆனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இன்னமும் நிறைவேற்றவில்லை. தேசிய பாதுகாப்பு மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டனர். மேலும் சுபீட்சமான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர். இதுவரையில் அதில் எதனையாவது செய்துள்ளார்களா?
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி என்பனவே கொள்கை அடிப்படையில் காணப்படுகின்றன. ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதாகக் கூறப்பட்டது.
ஆனால் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய இலங்கையில் உள்ள சந்தேகநபர்களுக்கு எதிராகக்கூட இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்பு கொண்டவர்கள் ஆளும் தரப்பினருடனும் தொடர்பில் இருக்கின்றமையே இதற்கு காரணமாகும். ஆளும் தரப்புக்கும் இந்த செயற்பாடுகளுடன் தொடர்புள்ளது என்று கூறுவதற்கு நாம் பின்வாங்க மாட்டோம்.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டு தாக்குதல் சம்பவம் எம்மீது சுமத்தப்பட்ட மற்றைய குற்றச்சாட்டாகும். இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த விசாரணைகள் அனைத்துமே ஒரு பகுதியில் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன. அதாவது வெளிநாட்டு புலனாய்வு தகவல்கள் கிடைக்கப் பெற்றும் தாக்குதலை தடுக்க முடியாமல் போணமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் மாறுபட்ட கோணத்தில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதலின் பிரதான சூஸ்திரதாரியான சஹ்ரான் ஹாசிமை, 2017 ஆம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவரை கைது செய்திருக்க வில்லை. அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார். அவருக்கு அதற்காக உதவி வழங்கிய நபர்கள் யார்?
இதேவேளை இவருடன் தொடர்பினை பேணிய ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தொடர்பிலும் கூறப்படுகின்றது. அதி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளலாம் தானே.
ஐ.எஸ். அமைப்பினருடன் இலங்கையில் சிலர் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவ்வாறான 45 நபர்கள் தொடர்பிலும் வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவு தகவல் வழங்கியிருந்தது. எனினும் அது தொடர்பில நடவடிக்கை எடுக்காமைக்கு காரணம் என்ன? இந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்த வேண்டும்.
தௌஹித் ஜமாஅத் அமைப்பினர் ஒரு சில முடிவுகள் எடுப்பதற்கு எம்நாட்டு புலனாய்வு பிரிவினர் ஒத்துழைப்பு வழங்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஒரு அமைப்பின் தலைவர் எப்போதும் தான் முதலாவதாக முன்வந்து தனது உயிரை தியாகம் செய்வதில்லை.
இந்த தாக்குதல் தொடர்பில் சஹ்ரானை பிரதான நபராக குறிப்பிட்டாலும், அதற்கு பின்னால் இன்னுமொரு குழு செயற்படலாம். அந்த மறைமுகமான சக்தி எதுவென்று கண்டறியப்பட வேண்டும். இந்த செயற்பாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவல் ஒரு பாதகமாக அமையாது அல்லவா.
நல்லாட்சி அரசாங்கத்தில் பொரளாதாரம் வீழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார்கள். அவர்களது ஆட்சியில் சுபீட்சமான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டனர். ஆனால் எதிர்பார்த்ததையும் விட பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
வைரஸ் பரவல் தொடர்பிலும் அவ்வாறே தாங்கள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதாக, ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஐனாதிபதி தெரிவித்தார். ஆனால், தற்போது நாடு பூராகவும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. மெனிங் சந்தையை பேலியகொட பகுதியில் காணப்படும் கட்டிடம் ஒன்றுக்கு மாற்ற தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கட்டிடத்தை அரசாங்கம் அமைத்ததாகவும் கூறிகின்றது. இது 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம். இந்நிலையில் அதனை எவ்வாறு இந்த அரசாங்கம் உருவாக்கியிருக்கும்.
இதன்போது 1191 பேருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கட்டிட தொகுதியை அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டுள்ளனர். அந்த அனைத்து கட்டிடத் தொகுதிகளும் உரிய தரப்பினருக்கே வழங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment