(செ.தேன்மொழி)
சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் இன்றி முன்மொழியப்படிருக்கும் இந்த வரவு செலவுத் திட்டம் புதிய தனவந்தர்களுக்கு இலாபமீட்டிக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் வருட இறுதியிலேயே வரவு செலவு திட்டத்தை முன்வைத்துள்ளனர்.
எதிர்வரும் வருடத்திற்காக இவர்களால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் அவர்களது சகாக்களுக்கும் கடத்தல் காரர்களுக்கும் கல்விமான்கள் என கூறிக் கொள்ளும் புதிய தனவந்தர்களுக்கும் பயனைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே அதனை தயாரித்துள்ளது.
இதில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் எந்த செயற்திட்டங்களும் உள்ளடக்கப்படவில்லை. தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவது தொடர்பிலும் இந்த வரவு செலவு திட்டத்தில் எந்த விடயமும் உள்ளடக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலைமையில், ஏனைய உலக நாடுகள், எந்தவொரு செயற்திட்டத்தை ஆரம்பிக்கும் போதும் இந்த வைரஸ் பரவல் தொடர்பிலும் கருத்திற் கொண்டு அதற்கேற்பவே தங்களது திட்டங்களை தயாரிக்கும். ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தில், வைரஸ் பரவல் தொடர்பில் ஒரேயொரு பந்தியில் மாத்திரமே கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பிலும், நாட்டில் உள்ள உழைக்கும் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையிலும், எந்த வேலைத்திடத்தையும் இவர்கள் இதில் முன்வைக்கவில்லை.
1973ஆம் ஆண்டிற்கு பின்னர் இவ்வருடமே அதிகளவான கடன்களை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. அவ்வாறு 2830 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளனர். இவ்வளவு தொகை கடனைப் பெற்றுக் கொண்டும் இதனால் நாட்டு மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் பெற்றுள்ளது? அந்த நிதியை அவர்கள் எதற்காக ஒதுக்கியுள்ளனர்?
பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையிலே அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகள் தொடர்பிலே கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் எண்ணினாலும் இவர்கள் கண்ணுக்கு புலப்படும் வகையில் ஏமாற்று செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதனை சுட்டிக்காட்டாமல் எம்மால் இருக்க முடியாது. என்றார்.
No comments:
Post a Comment