கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (25.11.2020) மட்டக்களப்பிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
ஏறாவூர் புன்னக்குடா தளவாய் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டைக்கான இடத்தினை பார்வையிட்டதுடன் வாழைச்சேனை காகிதாலைக்கும் சென்று பிரதேச மக்களுக்கு வழங்கப்படவுள்ள குடி நீர் விநியோக திட்டம் தொடர்பாகவம் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
மேற்படி அமைச்சினால் பாரிய புடவை நூல் உற்பத்தி கைத்தொழில் பேட்டை ஒன்றினை 600 மில்லியன் யூ.எஸ் டொலர் செலவில் நிர்மாணித்து அதற்கு தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் (3050) மூவாயிரந்து ஐம்பது மில்லியன் ரூபா செலவில் செங்கலடி எல்லை வீதியில் இருந்து 6 கிலோ மீற்றர் நீளமுடைய புன்னகுடா கடற்கரை வீதி வரை காபட் இட்டு செப்பனிடப்படவுள்ளதுடன் மேலும் இத்திட்டத்தின் கீழ் மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம் என மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள புடவை மற்றும் நூல் தொழிற்சாலையின் உள்ளக செலவுகளுக்காக 1700 மில்லியன் ரூபாய் செலவிடப்பட உள்ளதுடன் கைத்தொழில் பேட்டை பகுதியினுள் 12 தொழில் பேட்டையினை நிறுவதற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புடவை மற்றும் நூல் வகையினை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் 50 வீத இறக்குமதி குறைக்கப்பட்டு 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
காடதாசி ஆலையில் உள்ள வாகனேரி குளத்திலிருந்து குறித்த தொழிற்சாலைக்கு நீரினை பெற்றுக் கொள்வதற்கு அபிவிருத்தி செய்யப்படவுள்ள நீர் விநியோக திட்டம், கடதாசி தொழிச்சாலை உற்பத்தி நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சர் கடதாசி ஆலை பிரதேசத்தை அண்டி வாழ்கின்ற மக்களும் தமக்குத் தேவையான குடிநீர் வசதியினை பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட காலமாக இயங்காமல் இருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைத்தது போன்று இப்பகுதிக்கான குடி நீர் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலையில் இயங்காமல் இருந்து தற்போது கடதாசி ஆலை வளாகத்திற்குள் பாவனைக்காக பயன்படுத்தும் குடி நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை பார்வையிட்டதுடன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்த கருத்து தெரிவிக்கையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மூடப்பட்டிருந்த வாழைச்சேனை கடதாசி ஆலை ஜனாதிபதி கோட்டாபாயாவின் ஆலோசனையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் புனரமைப்பு செய்யப்பட்டு தற்போது இயங்க ஆரம்பித்துள்ளதுடன் இதன் உற்பத்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
இதேபோன்று இங்கு உள்ள குடி நீர் திட்டமும் புனரமைப்பு செய்யப்பட்டு இப்பகுதிக்கான குடி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அமைச்சின் உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண மற்றும் மாவட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்
No comments:
Post a Comment