தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.
அந்த வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படும் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இதனையடுத்து அவருக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவிடம் வினவியபோது, “அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தூதுவர் பதவி அல்ல, எந்தவொரு பதவியையும் ஏற்க நான் தயாரில்லை. ஓய்வு காலத்தை மிகவும் அமைதியான முறையில் வாழ விரும்புகின்றேன். எனது ஓய்வை ஏற்கனவே அறிவித்து விட்டேன்.
நான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்த காலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. மாகாண சபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த முடியாமல் போனது கவலைதான்” என்றார்.
குறித்த விடயம் தொடர்பாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார் மஹிந்த தேசப்பிரிய.
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்டுவரும் மஹிந்த தேசப்பிரிய, 2015 இல் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment