இட நெருக்கடி காரணமாக மஹர சிறைச்சாலை கலவரம் இடம்பெறவில்லை. ஜனாதிபதி மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலான சூழ்ச்சியே இதன் பின்னணியில் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மனித இரத்தத்தை பார்க்கத் தூண்டும் போதை மாத்திரையொன்றை சிறைச்சாலைக்குள் விநியோகித்து சிறைச்சாலைக்குள் கலவர நிலைமையை உருவாக்கும் நோக்கத்துடனே மஹர சிறைச்சாலை சம்பவமும் நடந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
மஹர சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையின் போது கருத்துத் தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில், மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை தொடர்பாக நான் தனிப்பட்ட ரீதியில் தகவல்களை தேடிப்பார்த்தேன்.
இந்த சம்பவம் சிறைச்சாலையிலுள்ள இட நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டதல்லவென புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. வெலிக்கடை சிறைச்சாலையில் 'சமயங்' என்ற குற்றவாளியின் சகாவான சத்துரங்க என்பவர் இருந்தார். அவர் வெலிக்கடை சிறைச்சாலையினுள் 'ரிவர்ஸ்' எனும் போதை மாத்திரையை கைதிகளுக்கு வழங்கி வந்தார்.
அந்த மாத்திரையை பயன்படுத்திய பின்னர் மனித இரத்தத்தை பார்க்க வேண்டும் என்ற வெறி வரும். வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அந்த மாத்திரைகளை விநியோகித்து கொலைகளை செய்வதற்கு தூண்ட எதிர்பார்த்துள்ளனர். போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பிரபல குழுவொன்றே சத்துரங்க என்ற நபரை வழிநடத்தியுள்ளது.
இதனை அறிந்த புலனாய்வுப் பிரிவினர் சத்துரங்க என்பவரை வேறு சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளனர். இதனால் வெலிக்கடையில் அதனை செய்ய முடியாது போயுள்ளது. ஆனால் மஹர சிறைச்சாலையில் இதனை நிறைவேற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இட நெருக்கடி நிலைமையால் இடம்பெற்றதாக நினைக்கக் கூடாது. திட்டமிட்டு சிறைச்சாலையில் கொலை செய்யும் நிலைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இருந்ததை போன்று ஜனாதிபதி காலத்திலும் நடப்பதாக சர்வதேசத்திற்கு காண்பிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்
No comments:
Post a Comment