(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் முழு நாட்டுக்கும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது. பொருளாதாரத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் அரசாங்கம் செயற்படுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக பிரதேச மட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை ஏன் முழு நாட்டுக்கும் பிறப்பிக்க கூடாது என எதிர்தரப்பினர் கேள்வியெழுப்புகிறார்கள்.
முழு நாட்டுக்கும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பதால் எவருக்கும் நன்மை கிடையாது, முழு நாட்டையும் முடக்க வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் மீண்டும் முழு நாட்டையும் முடக்கினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment