சமகால நிலைமைக்கேற்ப மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியினையும், பொருளாதாரத்தினையும், மக்களின் சுமுகமன வாழ்கைத் தரத்தினையும் மேம்படுத்தி மாவட்ட நிருவாகத்தினைக் கொண்டு செல்ல சிவில் சமுகம் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. க. கருணாகரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு சிவில் சமுகத்தினருக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (24) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
இச்சந்திப்பின்போது மாவட்டத்தின் சமகால நிலைமை, அதன் அபிவிருத்தி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக அதன் பரவலினைக் கட்டுப்படுத்தி மாவட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இப்பிரதேசத்தில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகள் போன்றவற்றுக்கு உளவளத்துனை செயற்பாடுகள் வழங்கப்பட்டு இவற்றினைத் தடுத்து நிறுத்துவதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென சிவில் சமுகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் இம்மாவட்டத்தில் காணப்படும் விவசாயம், விலங்கு விவசாயம் மற்றும் பால் பண்ணை உற்பத்திக்குத் தேவையான நீரினை வழங்கும் தூர்ந்துபோயுள்ள குளங்களை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும்,
மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட எல்லைப் பிரச்சினைகளான களுவாஞ்சிக்குடி எல்லைப் பிரச்சினை, மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் காணப்படவேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
சிவில் சமுக அமைப்பின் இக்கருத்துக்களை உள்வாங்கிய அரசாங்க அதிபர் சமகால நிலைமைகளுக்கேற்ப மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் தேவையான நடவடிக்கைகளை தமது நிருவாகத்தினூடாக முன்னெடுப்பதற்கு சிவில் சமுகத்தின் ஒத்துழைப்புகள் தேவை என தெரிவித்தார்.
No comments:
Post a Comment