பாறுக் ஷிஹான்
புதிய அரசியல் திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை வலுக்கச் செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலின் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், இன்று (15) செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில், புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு பிரசாரங்களைச் செய்து வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் செயலமர்வு எம்மால் நடாத்தப்பட்டது. அம்பாறை, காரைதீவுப் பகுதியிலும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து இத்திருத்தம் குறித்து கலந்துரையாடியுள்ளோம்.
இப்புதிய திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை வலுக்கச் செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். ஏனெனில், இத்திருத்தமானது, ஜனநாயக விரோதச் செயலாகவுள்ளது. இதனை நிறைவேற்ற நாங்கள் அனுமதித்தால், இந்நாட்டில் ஜனாநாயகக் கட்டமைப்பினைப் பேணாது மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போகும்.
அதுபோன்று நிலம் சம்பந்தமான பல திட்டங்களையும் அரசாங்கம் தற்போது அமுல்படுத்தி வருகின்றது. எனவேதான் இத்திருத்தத்தை நிறைவேற்றாமல் ஜனநாயகப் பண்பினைப் பேண வேண்டியது எமது கடமையாகவுள்ளது. எனவே, பொறுத்திருந்து பாருங்கள் எனக்கூறினார்.
இவ்விஜயத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment