பா.ஜ.க. துணைத் தலைவருடன் இடம்பெறப்போகும் கலந்துரையாடல் குறித்து விக்னேஸ்வரனின் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 2, 2020

பா.ஜ.க. துணைத் தலைவருடன் இடம்பெறப்போகும் கலந்துரையாடல் குறித்து விக்னேஸ்வரனின் அறிவிப்பு

முழுமையான சமஷ்டி முறையிலான பொறிமுறையொன்று வடக்கு கிழக்கில் நிறுவப்படும் வரை வடக்கு கிழக்கு மாகாண சபைகளை நீக்குவது தற்கொலைக்குச் சமமாகும் என வடக்கின் முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்’ என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய வெளிநாட்டு சேவைகள் அதிகாரி நடராஜன் ஆகியோருடன் சந்திப்பொன்றில் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாராந்த கேள்வி பதிலில் மேற்படி விடயம் தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டு 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக எனது கருத்துக்களை கூற முடியுமா என வானதி சீனிவாசன் சார்பாக என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தற்போது 13ஆவது திருத்தச் சட்டம் முக்கிய ஒரு பேசுபொருளாக இருப்பதால், இந்நிகழ்வில் கலந்துகொண்டு 13ஆவது திருத்தச் சட்டம் பற்றிய எனது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வது எனது கடமை என்றும் அதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் நான் கருதி கலந்துகொள்ள சம்மதித்தேன்.

இந்த நிகழ்வுக்கும் இந்திய பிரதமர் மோடி, 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி பிரதமர் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால், ஒரு விடயத்தில் நான் தெளிவாக இருக்கின்றேன். இலங்கையில் தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் உதவியும் ஒத்தாசையும் எமக்கு மிகவும் அவசியம். இதற்கு இந்தியாவுடனான தமிழ் மக்களின் சுமூக உறவு அவசியம்.

இந்தியாவுடன் நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். ஆனால், இந்தியாவுடனான எமது அணுகுமுறை தனி ஒரு நபர் சார்ந்தோ அல்லது தனி ஒரு கட்சி சார்ந்தோ இருக்க முடியாது. இருக்கக்கூடாது.

எனினும், பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கமும் தற்போதுள்ள இந்திய கொள்ளை வகுப்பாளர்களும் இவற்றை நன்கு புரிந்து உரிய முறையில் காய்களை நகர்த்துவார்கள் என்றே நான் நம்புகின்றேன்.

தற்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் இலங்கை விடயத்தில் நீண்ட அனுபவமுடையவராகவும் சர்வதேச அரசியலில் மிகச் சிறந்த ராஜதந்திரியாகவும் காணப்படுகின்றார். அவர் எமது பிரச்சினையை திறம்படக் கையாள்வார் என்பது எனது எதிர்பார்ப்பாகும்

ஆனால், இலங்கை அரசாங்கம் சார்பானவர்கள் மாகாண சபைகளை உடனே நீக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள். வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களில் மாகாண சபைகளை நீக்குவதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. எம்மைப் பொறுத்த வரையில் முழுமையான சமஷ்டி முறையிலான பொறிமுறையொன்று வடக்கு கிழக்கில் நிறுவப்படும் வரை வடக்கு கிழக்கு மாகாண சபைகளை நீக்குவது தற்கொலைக்குச் சமமாகும்.

இவ்வாறான கருத்துக்களை எல்லாம் இந்தியாவிற்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது. இச்சந்தர்ப்பத்தை அதற்காக நான் பயன்படுத்துகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment