300 அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் சுங்க திணைக்களத்தினர் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Friday, October 2, 2020

300 அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் சுங்க திணைக்களத்தினர் விசாரணை

COVID-19 வைரஸ் தொற்று காலப்பகுதியில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 300 அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் சுங்க திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவற்றில் BMW, பென்ஸ் உள்ளிட்ட அதிசொகுசு வாகனங்கள் பல அடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் பின்னர் இந்த வாகனங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் அதிகமான வாகனங்கள் அரச சேவையாளர்களுக்கும் தீர்வை வரி இன்றி நிறுவன அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துவோருக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் சில அரசாங்கத்தினால் நிபந்தனைகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏனையவை கடனுக்கான கடிதம் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதன் பின்னர் விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவ்வாறான வாகனங்கள் அரசுடைமையாக்கப்படக்கூடும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட அநேகமான வாகனங்கள் கொள்கலன்களினூடாக கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த வாகனங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சுங்க பணிப்பாளர் நாயகம், நிதி அமைச்சு, இறக்குமதி கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இறக்குமதிக்கான செலவை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே மாதம் தொடக்கம் அரசாங்கத்தால் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment