சிறுபான்மை மக்களின் குரலை நசுக்கும் முயற்சியே றிஷாத்தின் கைது! - முன்னாள் அமைச்சர் அமீர் அலி - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

சிறுபான்மை மக்களின் குரலை நசுக்கும் முயற்சியே றிஷாத்தின் கைது! - முன்னாள் அமைச்சர் அமீர் அலி

எஸ்.எம்.எம். முர்ஷித்

முஸ்லிம், தமிழ் சிறுபான்மை மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் முன்னனாள் அமைச்சர் றிஷாத் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதனூடாக இந்நாட்டு சிறுபான்மை மக்களின் குரலை நசுக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக றிஷாத் கைது முஸ்தீபு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு பெற்ற ஒரு தலைவராகச் சிறும்பான்மை மக்களுக்குச் சேவை செய்து வரும் அதே வேளை, அவர்களுக்கெதிராக இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு நாடாளுமன்றிலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுக்கின்ற ஒருவராகவும் றிஷாத் திகழ்கிறார்.

தனது பாராளுமன்றக் காலத்தில் அமைச்சராக இருந்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு இன, மத பேதமற்ற அபிவிருத்திகளை முன்கொண்டு செல்வதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அவர், எப்போதும் மக்கள் நலனுக்காகவே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

அத்துடன், தான் வகித்த அதிகாரங்கள், அமைச்சுக்களூடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் யுத்தத்தால் சின்னாபின்னமாகிப் போன வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கும் அப்பிரதேச மக்களின் புனர்வாழ்வுக்கு அரும் சேவையாற்றிய ஒருவராகத் திகழும் றிஷாத், தான் எடுத்துக் கொள்ளும் பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றும் அரசியல்வாதியாகத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டவர்.

அதன் காரணமாகவே சிறுபான்மை மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்ற அரசியல் தலைவராக அவர் மிளிக்கிறார்.

இவ்வாறாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்றிய ஒருவரை கைது செய்து பெரும்பான்மை இனத்தவரைத் திருப்திப்படுத்ததும் செயற்பாடுகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சியை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நாட்டின் பொருளாதாரத்தையே அதாலபாதாளத்துக்கு இட்டுச் செல்லுமளவு கொள்ளைகளில் ஈடுபட்ட பலர் நாட்டில் சுதந்தரமாகவும் தைரியமாகவும் நடமாடுகின்ற பொழுது இவ்வாறான கைதுகள் தமது இழந்து வரும் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ளவும் பெரும்பான்மையின மக்களை சிறுபான்மை மக்கள் பக்கம் திசை திருப்பி தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் எடுக்கும் முயற்சியை இன, மத அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் கண்டிக்க வேண்டியது அவசியமாகின்றது.

தனிப்பட்ட குரோதங்களை, பகைகளைத் தீர்த்துக் கொள்ளும் சரியான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சியைக் கைவிட்டு, நாட்டின் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் நிம்மதி சந்தோசத்துடன் வாழ நடவடிக்கை மேற்கொள்ளப் புதிய அரசு முன்வர வேண்டும்.

அதே நேரம், அரசியல் வேறுபாடுகள், கட்சி பேதங்களை மறந்து முன்னாள் அமைச்சர் றிஷாத்தின் கைதுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

அவரையும் அவரது சகோதரர்களையும் அவரைச் சார்ந்தோரையும் கைது செய்து அடைப்பதனூடாக ஒரு சாராரைத் திருப்திப்படுத்த எடுக்கப்படும் செயற்பாடுகளினால் நாட்டுக்கும் நாட்டுக்கு மக்களுக்கும் நன்மை ஏதும் விளையப்போவதில்லை.

ஆகவே, அவரது கைதை மீள் பரிசீலனை செய்வதோடு, தொடர்ந்தும் அவர் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.

அதே நேரம், அவர் தொடர்பிலும் அவரது கைது தொடர்பிலும் வீணான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதையும் ஊடகங்களில் தெரிவிப்பதையும் தவிர்ந்து கொள்ளுமாறும், இதனை வைத்து அரசியல் இலாபம் தேட எடுக்கும் முயற்சிகளுக்கு துணை போவதை த் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்வதுடன் இதனைக்கொண்டு பெரும்பான்மை இன மக்களுக்கெதிரான பிரசாரங்களை முன்னெடுப்பதையும் இது சார்கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பகிர்வதை விட்டும் அவரது ஆதரவரளர்கள், அபிமானிகள், கட்சித்தொண்டர்கள் தவிர்ந்து கொள்ளுமாறும் தயவாய்க் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment