மரக் கடத்தலைக் கட்டுப்படுத்துமாறும், இனியும் இவ்வாறான மரக் கடத்தல் செயற்பாடுகளையும், மரக் கடத்தல்காரர்களின் அச்சுறுத்தல் செயற்பாடுகளையும் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்க முடியாது என முன்னாள் வட மாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட வன அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட ஊடவியலாளர்கள் அண்மையில் மரக் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டமைக்கு, எதிர்ப்புத் தெரிவித்து 15.10.2020 இன்றைய நாள் வடக்கு ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், மாவட்ட வன அதிகாரிக்கும் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.
இதன்போது குறித்த போராட்டத்தில் ஊடவியலாளர்களுடன் கலந்து கொண்ட ரவிகரன் வன அதிகாரியுடன் பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக இயங்க வேண்டியவர்கள். அவர்களை மரக் கடத்தல்காரர்கள் இவ்வாறு கடுமையாகத் தாக்கியுளார்கள். இதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்கள் மரங்களை பாரிய அளவில் நாட்டினார்கள். தற்போது மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டுக் கடத்தப்படுகின்றது.
எனவே தாங்கள் பொறுப்பு வாய்ந்த வனத் திணைக்களம் என்ற வகையில் இவ்வாறான மரக் கடத்தல் சம்பவங்களை, நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
இதைத் தற்போது நாம் பொறுமையாக மகஜர் மூலம் தெரிவித்திருக்கின்றோம். இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் நாம் பார்த்துக் கொண்டு பொறுமையா இருக்க முடியாது என கடுமையாக எச்சரித்தார்.
No comments:
Post a Comment