சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய தரம் ஐந்து புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய தரம் ஐந்து புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய நாளை இடம்பெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

2,936 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதுடன், இம்முறை 3,31,694 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விசேட திட்டத்தின் கீழ் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

கம்பஹா கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 6000 மாணவர்களும் உயர்தரப் பரீட்சையில் 7000 மாணவர்களும் தோற்றவுள்ளனர்.

மினுவாங்கொடை கல்வி வலயத்தில் 50 புலமைப்பரிசில் பரீட்சை நிலையங்களும் 37 உயர்தரப் பரீட்சை நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் அது தொடர்பில் மாணவர்களுக்கும் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் நவம்பவர் 06 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள இரண்டாயிராத்து 684 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்தி 62 ஆயிரத்து 824 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்கு இதுவரை அதற்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காதிருந்தால் விண்ணப்பதாரர் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உபயோகித்து பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். அதற்கிணங்க, இணையத்தளத்தில் மூலம் தரவிரக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் பரீட்சை நிலையங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளை இணைத்துக்கொண்டு பரீட்சை நிலையங்களில் கிருமித் தொற்று நீக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் பரீட்சை நிலையங்களுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகள், அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment