வெளிநாட்டில் வாழ்வதாக அமைச்சர் ஹெகலிய தெரிவித்த கருத்து உண்மை - ஊடகவியலாளர்கள் எனக்கூறித் திரிபவர்கள் உடந்தையாகவுள்ளனர் : அஹமட் புர்க்கான் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

வெளிநாட்டில் வாழ்வதாக அமைச்சர் ஹெகலிய தெரிவித்த கருத்து உண்மை - ஊடகவியலாளர்கள் எனக்கூறித் திரிபவர்கள் உடந்தையாகவுள்ளனர் : அஹமட் புர்க்கான்

பாறுக் ஷிஹான்

காணாமலாக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்கல அண்மையில் தெரிவித்த கருத்து உண்மையானதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி உறவுகள் வெளிநாட்டில் உள்ளனர் என்றால், தொடர்புகளை ஏற்படுத்தித் தாருங்கள் என கல்முனையில் தெரிவித்த கருத்தினை மறுதலித்து (16) மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்டத்தலைவி எனக்கூறித்திரிபவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலான இவ்விடயத்தை வைத்து அரசியல் செய்கின்றார். எமது அரசாங்கத்தை அடிக்கடி சங்கடப்படுத்துகின்றார். சுமூகமாகவுள்ள உறவுகளைச் சீர்குலைக்க கல்முனைப் பகுதிக்கு வந்து இவ்வாறான செய்தியாளர் மாநாட்டை நடத்துவது சந்தேகத்திற்குரியது.

இதற்கு சில ஊடகவியலாளர்கள் எனக்கூறித் திரிபவர்கள் உடந்தையாகவுள்ளனர். இவ்வாறாக ஊடகவியலாளர் பெயரைக் கொச்சைப்படுத்தும் நபர்களை அரசாங்கம் அடையாளப்படுத்த வேண்டும். இவர்களது அடையாளங்களை உறுதிப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டும். இன்று ஊடக சுதந்திரத்தை வைத்துக்கொண்டு இவ்வாறான வங்குரோத்து சங்கத்தலைவி போன்றவர்களைக்கூட்டி வந்து மாநாடு என்ற போர்வையில் வெளிநாட்டிற்கு வீடியோக்களை அனுப்பி எமது அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்கு உட்படுத்துகின்றனர்.

யுத்த காலங்களில் பொதுமக்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்கல அண்மையில் ஒரு கருத்தினை முன்வைத்திருந்தார். அக்கருத்து உண்மையானது. ஆனால், இச்சங்கத் தலைவி காணாமலாக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என அமைச்சர் கூறியிருக்கின்றார். 

ஆயின், அவ்வாறு அவர்கள் வெளிநாடு சென்றிருந்தால் சிறிலங்கா விமான நிலையத்தினூடாக சென்றிருக்க வேண்டும். இவ்வாறு சென்றால் இலங்கை அரசுக்குத் தெரியாமல் எதுவும் நடைபெற்றிருக்காதெனக்கூறி அவர்கள் எங்கிருக்கின்றார்கள். அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்தால் நாங்கள் தேட வேண்டிய அவசியமில்லை என்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக அரசாங்கம் ஏலவே பதில் வழங்கி விட்டது. ஆனால், இவர் தான் சித்த சுவாதினமற்றவர் போன்று குழம்புகின்றார். இவரை காணாமலாக்கப்பட்டோர் சங்கத்திலிருந்து நீக்கியதாக செய்திகள் கடந்த காலங்களில் வெளிவந்தமை யாவரும் அறிவர். இவர் போன்றவர்கள் இப்படியான அப்பட்டமான பொய்களைச் சொல்லி எமது அரசுக்கு அவப்பெயரை காலாகாலம் மேற்கொண்டுள்ளனர்.

11 வருடங்களாக உறவுகளைத்தேடும் இவர்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள பொறிமுறைகளைப் பலரும் ஏற்று இன்று மறுவாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இவரைப் போன்ற சில புல்லுருவிகள் வெளிநாட்டுப் பணத்திற்கு ஆசைப்பட்டு இவ்வாறான கருத்துக்களை முன்வைக்கின்றனர். 

எனவே, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சார்பாகப் போராடுவதாக எமது நாட்டிற்கு அவப்பெயரைக் கூறி வரும் இவ்வாறானவர்களின் கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தால் நாங்கள் இதற்கெதிராகப் போராடத் தயாராகவிருக்கின்றோம் எனச் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment