கொரோனா தொற்றினை தடுக்க முகக் கவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது, டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சி.யமுனாநந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது டெங்கு நோயானது யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள பரவ ஆரம்பித்துள்ளது, நேற்று மாத்திரம் 5 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் பாசையூர், சுழிபுரம் சுன்னாகம், அரியாலை மற்றும் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள். தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்பு பெருக்கம் அதிகமாக காணப்படும். எனவே யாழ் மாவட்ட மக்கள் சுற்றுச் சூழலினை மிகவும் தூய்மையாக பேண வேண்டியதும் அவசியமாகும்.
குப்பைகள், பிளாஸ்டிக் போன்றவற்றினை இல்லாமல் செய்வதன் மூலம் டெங்கு நுளம்பு பெருகுவதனை கட்டுப்படுத்தலாம். அடுத்ததாக டெங்கு நுளம்பு கடிக்கும் நேரமான காலை 9 மணி வரை அதேபோல் மாலை 4 தொடக்கம் 6 மணி வரை சிறு பிள்ளைகளுக்கு நுளம்பு கடிக்காமல் இருப்பதற்காக ஆடைகளை உடம்பு முழுவதுமாக போட வேண்டும்.
தற்போது நாட்டில் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு தொற்றும் ஏற்படுமாயின் இரட்டை நோய்த் தொற்று ஏற்படலாம் தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சையளிக்க வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகும்.
எனவே பொதுமக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் டெங்கு பெருகும் சூழலை எமது பிரதேசத்தில் இல்லாமல் செய்வதன் மூலமும் டெங்கு தொற்று ஏற்படுவதனை தடுக்க முடியும். இவ்வாறு செய்வதனால் நமக்கு ஏற்படக்கூடிய அனாவசியமான இழப்புக்கள் உயிரிழப்பு களை தவிர்க்கலாம் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment