யாழ். அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டது : வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

யாழ். அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டது : வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை

யாழ். அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இன்று காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு பிரதேசத்தில் நடமாடியதாக கருதப்படுவதன் காரணமாக அனலைதீவு பிரதேசம் சுகாதாரப் பிரிவினரின் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பிரதேசத்தில் நடமாடியதன் காரணமாக காரைநகர் பிரதேசத்தில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று ஒருவருக்கு மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

யாழ் மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் குழுவினுடைய தீர்மானத்தின்படி சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் ஊடாகவும் அதே நேரத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரது அறிவுறுத்தலின்படி சில முற்பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை வழங்கி அவர்களை நடைமுறைப்படுத்தும்படி வேண்டியிருக்கின்றோம். இந்த நிலையிலே தற்போது யாழ் மாவட்டம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் இன்னும் அபாயமான ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. ஆகவே முற்பாதுகாப்பு நடவடிக்கையினை அனைவரும் ஒருங்கிணைந்து எடுப்பது மிக கட்டாயமானதாகும். 

இன்றைய நிலையில் சுமார் 411 குடும்பங்களைச் சேர்ந்த 868 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். புங்குடுதீவில் சுமார் 127 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். புங்குடுதீவில் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. யாழ் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. 

அநேகமாக தற்பொழுது வதந்திகள் பரப்பப்படுகிறது பொதுமக்கள் வதந்திகளை நம்பாதீர்கள். கொரோனா தொற்றுக்கு இனங்காணப்படுபவர்களோடு சம்பந்தப்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுள்ளார்கள். இருந்தபோதிலும் தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அச்சம் முற்றாக நீங்கிவிடவில்லை. 

எங்களைப் பொறுத்தவரைக்கும் அதிகமாக வெளியூரில் இருந்து வருகை தந்து இங்கே தொழில் புரிகின்றவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரத் திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளார்கள். அதிகம் தொற்றுள்ள கம்பஹா மாவட்டம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து கடமையாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிசோதனைகளை நாங்கள் மேற்கொள்வதாக தீர்மானித்துள்ளோம். 

அத்தோடு வடக்கு மாகாண ஆளுநர் ஒரு அறிவுறுத்தலினை வெளியிட்டுள்ளார். மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதாவது மேற்கு மாகாணங்களிலிருந்து இரு வாரங்களுக்குள் வருகை தந்தோர் தொடர்பான விவரங்களை சேகரித்து அவர்களுக்குரிய பி.சி.ஆர். பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

அதேபோன்ற ஒரு செயற்பாடு யாழ் மாவட்டத்திலும் கடந்த இரண்டு வாரங்களுக்குள் வெளி மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு வந்தவர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்குரிய பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

எனவே அவ்வாறு வருகை தந்தவர்கள் தாங்கள் சுயமாக தங்களுடைய பதிவுகளை வைத்திய அதிகாரி பிரிவுகளில் வழங்க வேண்டும். அதேபோல் பிரதேச செயலர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தங்களுடைய பிரதேசங்களில் இரண்டு வாரங்களுக்குட்பட்ட பகுதியில் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்தோரின் பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். 

கல்வித் திணைக்களத்தினை பொறுத்தவரைக்கும் அரசாங்கத்தினுடைய அறிவுறுத்தலின் பிரகாரம் முடக்கப்பட்ட பகுதிகளில் அல்லது முடக்கத்திற்குள்ளாக்கப்படும் என கருதப்படும் பிரதேசங்களில் பரீட்சைகள் நடாத்துதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பிரதானமாக மாணவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கமைய குறித்த பரீட்சைகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5ம் வகுப்பு புலமைப் பரிசில் மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சைகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சூழ்நிலைக்கு ஏற்ப அதனை அனுசரித்து மாணவர்கள் சில வேளைகளில் தங்குமிட வசதியுடன் அந்த பரீட்சையினை எழுதுவதற்குரிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது முடக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மற்றும் அனலை தீவு பகுதிகளில் திட்டமிட்ட படி குறித்த பரிட்சைகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment