இஸ்ரேல் - பஹ்ரைன் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவு இன்று முதல் தொடங்கியது - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

இஸ்ரேல் - பஹ்ரைன் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவு இன்று முதல் தொடங்கியது

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து முதல் முறையாக இஸ்ரேல் - பஹ்ரைன் நாடுகளுக்கு இடையே தூதரக உறவு இன்று (18) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்தன.

ஆனால், பிற அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனி நாடாக ஏற்றுக் கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உட்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தன.

இதையடுத்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் கடந்த மாதம் 15 ஆம் திகதி இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆபிரகாம் உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் மூலம் இந்நாடுகள் இடையே அமைதி ஏற்பட வழி பிறந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு அந்நாட்டுடன் விமானப் போக்குவரத்து, தூதரக நடவடிக்கைகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் இணைந்து செயல்பட ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் முறைப்படி தூதரக உறவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு தரப்பும் தங்கள் தூதரகங்களை இரு நாடுகளிலும் அமைத்துக் கொள்ளலாம். 

இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலமில் பஹ்ரைனின் தூதரகமும், பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் இஸ்ரேலின் தூதரகமும் அமைய உள்ளது. 

தூதரக உறவு தொடங்கியுள்ளதால் அடுத்த மாதம் 15ம் திகதிக்குள் இஸ்ரேல் தனது தூதரகத்தை பஹ்ரைனில் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளும் தங்கள் தூதரக அதிகாரிகளை பணியமர்த்த உள்ளனர்.

No comments:

Post a Comment