பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியிலிருந்து விடை பெற்றார் சட்டத்தரணி குருபரன்! - News View

About Us

About Us

Breaking

Friday, October 16, 2020

பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியிலிருந்து விடை பெற்றார் சட்டத்தரணி குருபரன்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரான சட்டத்தரணி இன்றுடன் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ளார். 

“இன்று இறுதி நாள். இந்த தசாப்த காலப் பயணத்தில் அன்பும் ஆதரவும் தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி. பயணம் வேறு பாதைகள் வழி தொடரும்" என அவர் தனது வெளியேற்றம் தொடர்பில் பதிவிட்டுள்ளார். 

குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக முன்னதாக அனுப்பி வைத்திருந்தார். 

தான் பதவி விலகுவதற்கான காரணமாக, அவர் பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்துள்ளமையை சுட்டிக்காட்டியிருந்தார். 

தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுக் கொண்டிருக்க தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத்தன்மை இல்லாதிருக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தனது இராஜினாமா கடிதத்தில் கலாநிதி குருபரன் குறிப்பிட்டிருந்தார். 

நடைமுறை அனுபவம் இல்லாத ஓர் சட்ட ஆசிரியராக தான் கடமையாற்றுவது இயலாத விடயமென்றும், தனது சட்டத் தொழில் மூலம் தான் செய்து வந்த சமூக பங்களிப்பும் ஊடாட்டமும் தனது ஆசிரியப் பணியில் இணை பிரியா அங்கம் என்றும் அது இல்லாத சட்ட ஆசிரியர் பணியில் தனக்கு ஈடுபடுவது திருப்தியை தர மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

சட்டத் தொழிலில் ஈடுபடுவது கூடிய வருமானத்தை தரும் என்ற காரணத்திற்காக தான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் அவ்வாறாக எடுப்பதாயின் தான் அதனை 2010 ஆம் ஆண்டிலேயே அந்த முடிவை எடுத்திருந்துப்பேன் என்றும், வகுப்பறையில் மட்டும் முடங்கியிருக்கும் ஆசிரியராக கடமையாற்ற தான் தயாரில்லை என்றும் குருபரன் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருந்தார். 

தன் மீது விதிக்கப்பட்ட தடை பல்கலைக்கழகம் சுயாதீனத்தை முழுவதுமாக இழந்துவிட்டதுக்கான முக்கியமான சான்று என்றும் தனது நலன்கள் தொடர்பில் சுயமாக முடிவு எடுக்க முடியாத பல்கலைக்கழகம் யாருக்காக செயற்படுகின்றது என்ற கேள்வியையும் அவர் இதன்போது எழுப்பியிருந்தார். 

நல்லாட்சி, சட்டத்தின் பாலான ஆளுகை, சுயாதீனம் ஆகியவற்றை தொலைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நல்லாசிரியர்களை ஈர்க்கவும் முடியாமல் தொடர்ந்து வைத்திருக்கவும் முடியாமல் நலிவடைந்து கொண்டிருப்பதாக கலாநிதி குருபரன் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment