மட்டக்களப்பில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தற்கொலை முயற்சி - காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த இராணுவத்தினர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

மட்டக்களப்பில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தற்கொலை முயற்சி - காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த இராணுவத்தினர்

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அங்கிருந்து தப்பித்து கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலை செய்ய முற்பட்டபோது இராணுவத்தினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுணதீவு பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 22 வயதுடைய ஆயித்தியமலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினமான கடந்த 4ம் திகதி இரவு 11 மணியளவில் காதலன் சிறுமியை கையடக்க தொலைபேசியில் தொடர்புகொண்டு வீட்டில் இருந்து வெளியில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளான்.

இதனையடுத்து குறித்த சிறுமி வீட்டின் வெளிப்பகுதில் நின்றிருந்த போது அங்கு மதுபோதையில் அவளுடைய காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் வந்திருந்ததாகவும் அப்போது சிறுமியை வீதிக்கு வருமாறு அழைத்தபோது சிறுமி வர முடியாது என தெரிவித்த நிலையில் காதலனின் நண்பர்கள் இருவர் சிறுமியின் வாயை பொத்தி அவரை வீட்டின் வேலிப்பகுதியில் இருந்து தூக்கி கொண்டு அருகிலுள்ள காட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் காதலன் சிறுமியை முதலில் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பின்னர் அவரின் நண்பன் ஒருவன் சிறுமியை பலாத்காரம் செய்ய முற்பட்ட போது சிறுமி அவனின் கையை வாயால் கடித்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு தப்பி ஓடியுள்ளார்.

இதன் பின்னர் கடந்த 05 திகதி திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட் சிறுமியின் உறவினர்கள் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமி மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டதுடன் பாலியல் துஷபிரயோகத்துக்குள்ளான சிறுமியின் காதலன் மற்றும் நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கடந்த 06ம் திகதி இரவு வைத்தியசாலையில் இருந்து தப்பி மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் குதித்தபோது அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் உடனடியாக செயற்பட்டு அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதேவேளை தலைமறைவாகி வந்த சிறுமியின் காதலன் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர் உட்பட 3 பேரை இன்று (08) கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment