கொரோனா சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும், அவர் வெள்ளை மாளிகையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவார் எனவும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2ம் திகதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
அதில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர். வெள்ளை மாளிகையில் இருந்த டொனால்ட் ட்ரம்பிற்கு லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது.
காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக நேற்று ஜனாதிபதி டிரம்ப் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது ட்ரம்ப்பின் நிலைமை சற்று மோசமாக இருந்ததாக தகவல் வெளியான நிலையில் அவர் ரெம்டெசிவிர் மருந்தை தொடர்ந்து எடுத்து வந்தார்.
இந்நிலையில், வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனையில் இருந்து நாளையே (திங்கட்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப்பின் மருத்துவக் குழு வெளியிட்டுள்ள தகவலில், ‘கொரோனா பாதிப்பின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இரண்டு முறை ரத்தத்தில் உள்ள ஒக்சிஜன் அளவு குறைந்தது.
வெள்ளிக்கிழமை காலை முதல் ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு காய்ச்சல் எதுவும் ஏற்படவில்லை. அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் ரெம்டெசிவிர் மருந்தில் இரண்டு டோஸ்களை இதுவரை எடுத்துள்ளார்.
அவரது நுரையீரல், கல்லீரல் இயல்பாக செயல்பட்டு வருகிறது. அவர் வால்டர் ரேட் மருத்துவமனையில் இருந்து நாளை (திங்கட்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment