பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் அவர் தலைமறைவாகியிருப்பதற்கு உதவிகள் புரிந்த குற்றச்சாட்டுக்காக மொத்தமாக 07 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (19) பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு மருத்துவர் உட்பட தம்பதியினரும், ஒரு வெளிநாட்டு நிறுவன பிரதிநிதியும் உள்ளடங்குவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் கொஹுவள - களுபோவில பகுதியில் உள்ள வீட்டிலிருந்த ரிஷாட் பதியுதீன் எம்.பி., அங்கிருந்து தெஹிவளை, எபினேசர் வீதியிலுள்ள குறித்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அவர் வந்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த ஆறு நாட்களாக, ஆறு பொலிஸ் குழுக்களால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று அதிகாலை கொழும்பு தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு உத்தரவிடுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர், ரிஷாட் பதியுதீன் எம்.பி. குறித்து விழிப்புடன் இருக்குமாறு, சிஐடி அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தியதாக, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
No comments:
Post a Comment