அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சில முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன.
இதன்போது 20வது திருத்த சட்டமூலம் குறித்த விவாதத்தினை ஆரம்பித்து வைத்து, உரையாற்றிய போதே நீதி அமைச்சர் அலி சப்ரி குறித்த திருத்தங்களை முன்வைத்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக மாற்றங்கள் செய்யப்பட்டு 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கபட்டுள்ளது.
இதற்கமைய, 20 ஆவது திருத்தத்தின் 5ஆவது சரத்தின்படி ஜனாதிபதியினால் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்துக்கு செல்ல முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனாதிபதியினால் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், திருத்தங்கள் ஊடாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவருட காலப்பகுதியில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குவதாக 20 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், நாடாளுமன்றத்தை இரண்டரை வருடத்தில் கலைப்பதற்கும், அது சார்ந்த தீர்மானங்களை ஜனாதிபதியினால் முன்னெடுக்க முடியுமெனவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அமைவாக 22 ஆவது சரத்தினை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைவாகவும், தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவும் ஜனாதிபதியினால் தீர்மானங்கள் மேற்கொள்ள முடியுமென மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வு நடவடிக்கை 19ஆவது திருத்தத்தில் உள்ளதை போன்றே மாற்றங்கள் இன்றி 20 ஆவது திருத்தத்திலும் கொண்டுவர தீர்மானிக்க்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சுக்கள் 30 ஆகவும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுகள் 40 ஆகவும் கொண்டுநடத்த புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment