20ஆவது திருத்தத்தின் ஒரு சில பிரிவுகளுக்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியம் - சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

20ஆவது திருத்தத்தின் ஒரு சில பிரிவுகளுக்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியம் - சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு

அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பிலான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் இன்று (20) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் ஒரு சில உட்பிரிவுகளை விசேட பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் எனவும், ஒரு சில உட்பிரிவுகளுக்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

குறித்த 20ஆவது திருத்தம், அரசியலமைப்பின் 82(1) பிரிவிற்கு இணங்குவதாகவும், 82(5) பிரிவிற்கு அமைய விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், அதன் 3 5, 14, 22 ஆகிய பிரிவுகள், அரசியலமைப்பின் 4ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, 3ஆவது பிரிவுடன் ஒத்திசையாததன் காரணத்தினால், அரசியலமைப்பின் 83ஆவது பிரிவுற்கு அமைய, சர்வசன வாக்கெடுப்பின் மூலம் பொதுமக்களால் அவை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும், ஆயினும் அதன் 3,14 ஆகிய பிரிவுகளில் காணப்படும் விடயங்களை பாராளுமன்ற குழுநிலை அமர்வின் போது, மாற்றியமைத்து நீக்கப்பட முடியும் எனவும் 5ஆவது பிரிவில் காணப்படும் விடயத்தை, உச்ச நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள முடிவுக்கு அமைய, அவசியமான விதத்தில் மாற்றியமைத்து நீக்க முடியும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது என சபாநாயகர் இதன்போது அறிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் குறித்த வியாக்கியானம், கடந்த சனிக்கிழமை (10) கிடைக்கப் பெற்றதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்ததோடு, இன்றையதினம் (20) அதனை அறிவிக்க திட்டமிட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த மனுக்களின் பரிசீலனை, கடந்த ஒக்டோபர் 05 ஆம் திகதி நிறைவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முடிவு ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு பரிந்துரைக்கப்படும் என, நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment