ரஷிய நாட்டின் ஆயுதக் கிடங்கில் தீ - 14 கிராம மக்கள் வெளியேற்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

ரஷிய நாட்டின் ஆயுதக் கிடங்கில் தீ - 14 கிராம மக்கள் வெளியேற்றம்

ரஷிய நாட்டின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாமக 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் உடனடியாக, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து தென்கிழக்கில் ரியாசான் என்ற இடத்துக்கு அருகே ராணுவ தளத்தில் ஆயுதக் கிடங்கு செயல்பட்டு வந்தது. இங்கு ஏவுகணைகளும், பிற பீரங்கி ஆயுதங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த ஆயுதக் கிடங்கில் நேற்றுமுன்தினம் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவியதால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறியது. உடனடியாக அந்த பகுதியில் அவசர கால நிலை அமல்படுத்தப்பட்டது.

அந்த ஆயுதக் கிடங்கில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் உடனடியாக, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். 

சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 70 தீயணைப்பு படை வீரர்கள், தீயணைப்பு வாகனங்களுடன் சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மிக மோசமான தருணம் முடிவுக்கு வந்துள்ளதாக பிராந்திய ஆளநர் நிகோலே லுபிமோவ் தெரிவித்தார். இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக இன்னும் தெரிய வரவில்லை.

No comments:

Post a Comment