மன்னார் பேசாலையில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 9, 2020

மன்னார் பேசாலையில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து மன்னார் பேசாலை கிராம மக்கள் நேற்று காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினர்.

பேசாலை கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம் காலை 8.45 மணியளவில் பேசாலை பஸார் பகுதியில் நடைபெற்றது.

அயல் நாட்டு இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து கடல் வளங்களை அழித்து வருகின்றமையை கண்டித்தும், பேசாலை உற்பட கரையோர பகுதிகளுக்கு போதைப் பொருட்கள் கொண்டு வருகின்ற நடவடிக்கைகளை கண்டித்தும், கொரோனா பரவலை ஏற்படுத்தும் சூழ்நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தை கண்டித்தும், இந்திய இழுவைப் படகுகளினால் மன்னார் மீனவர்கள் பாதிப்படைந்து வருகின்றமையையும் கண்டித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

பேசாலை கிரமத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு, மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லாமல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக ‘எமது கடல் எமது மக்கள் தொழில் புரிவதற்கே இந்திய மக்களுக்கல்ல’, ‘இந்திய அரசே... எமது கடல் வளத்தை அழிக்கும் செயல்பாட்டை உடன் நிறுத்து’, ‘இலங்கை அரசே... எமது மீனவர்களை பட்டினிச்சாவில் இருந்து காப்பாற்று’ உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த 30 வருட கால யுத்தத்தின் போது அனுபவிக்காத பல்வேறு பிரச்சனைகளுக்கு தாம் தற்போது முகம் கொடுத்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பேசாலை கிராம மக்கள் தெரிவித்தனர்.

மன்னார் நிருபர்

No comments:

Post a Comment