முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளிநாடு செல்லும்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக எவரையும் நியமிக்கவில்லை - ஒஸ்டின் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளிநாடு செல்லும்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக எவரையும் நியமிக்கவில்லை - ஒஸ்டின் பெர்னாண்டோ

எந்த அமைச்சராவது வெளிநாடு செல்கையில் அவர்களது கடமையைச் செய்வதற்கு யாராவது நியமிக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஒரு சந்தர்ப்பம் தவிர வெளிநாடு சென்றபோது பதிலாக எவரையும் நியமிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவர் ஜனாதிபதியின் செயலாளராக 2017 முதல் 2018 வரை சிறிது காலம் பணியாற்றியிருந்தார். உங்களது பதவிக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் எவ்வாறான உறவு முறை இருந்தது என்ற விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அங்கு அவர்களுக்கிடையில் அரசியல் நோக்கத்துக்காக ஒரு முரண்பாடு இருந்ததாக சில கட்சிகள் கூறிக் கொண்டிருந்தன. அத்தகைய ஒரு முரண்பாட்டை நான் அவதானிக்கவில்லை எனக் கூறினார்.

எவ்வாறாயினும் 2018 ஒக்டோபர் முதல் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அது தீர்மானம் மேற்கொள்ளும் செயல்முறையில் ஒரு தாக்கத்தை செலுத்தும் என நான் உணரவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் அவர்கள் பொறுப்புடன் பணியாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னை ஆட்சி குறித்த ஒட்டுமொத்த நிலை பற்றிய கேள்விக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எதுவும் நடக்கவில்லை மற்றும் எவ்வாறு தேசிய பாதுகாப்பு பேரவை நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரல் இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதன்போது முன்னைய ஆட்சியில் தேசிய பாதுகாப்புக்கு மேலாக நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை தரப்பட்டதா என்ற கேள்விக்கு, முன்னைய அரசாங்கம் மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அதிக அக்கறையுடன் இருந்தது. அது மிகவும் முற்போக்கான ஒரு திட்டமாக இருந்தது என்றார். சில கூறுகளைச் செயற்படுத்தாததால் அங்கு சில பிரச்சினைகள் இருந்தன. நல்லிணக்க செயற்பாட்டில் அது செயலில் இருக்க வேண்டும்.

இஸ்லாமிய இராச்சிய (ஐ.எஸ்.) அமைப்பை தடை செய்வது குறித்து தேசிய பாதுகாப்பு பேரவையில் கலந்துரையாடப்பட்டதா என்ற கேள்விக்கு சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பை தடை செய்வது இலங்கை போன்ற நாடுகளுக்கு சாத்தியம் என தான் நம்பவில்லை என்றும் அது அரசுத் தலைவர்கள் செய்யக்கூடிய ஒன்றல்ல என்றும் அவர் தெரிவித்தார்

தினக்குரல்

No comments:

Post a Comment