(ஆர்.ராம்)
புதிய அரசியலமைப்புக்கான வரைபினைத் தயாரிக்கும் நிபுணர் குழுவின் முதலாவது கூட்டம் இந்த வார இறுதிக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தெரிவித்தார்.
அத்துடன் நிபுணர் குழுவானது தனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளுக்கு மட்டுப்பட்டு செயற்படமாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
புதிய அரசியலமைப்புக்கான வரைபினை தயாரிப்பதற்குரிய நிபுணர் குழுவானது ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில் ஒன்பது உறுப்பினர்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவில் சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிபலிக்கும் வகையில் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன், பேராசிரியர் நசீமா கமூர்தீன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, ஜனாதிபதி சட்டத்தரணிகளான மனோகர த சில்வா, காமினி மாரப்பன, சஞ்சீவ ஜயவர்தன, சமந்த ரத்வத்த ஆகியோரும் பேராசிரியர்களான ஜீ.எல்.பீரிஸ், வசந்த செனவிரத்ன ஆகியோரும் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிய அசரியலமைப்புக்கான வரைபினைத் தயாரிக்கவுள்ள நிபுணர் குழுவின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்புக்கான வரைவினை தயாரிப்பதற்குரிய நிபுணர் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். மிக முக்கியமான பணியொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உணர்கின்றேன்.
புதிய அரசியலமைப்புக்கான வரைவு எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பில் என்னால் இப்போது எதனையும் கூற முடியாது. எனினும் புதிய அரசியலமைப்புக்கான வரவினைத் தயாரிக்கும் நிபுணர் குழுவின் முதலாவது கூட்டத்தினை இந்த வார இறுதிக்குள் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
அதேநேரம், எனது அரசியல் நிலைப்பாடுகளோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கோ அரசியலமைப்புக்கான வரைவு மட்டுப்படாது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். அத்துடன் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் முன்மொழிவுகள் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே வரைவினை தயாரிக்கப்படும் என்றார்.
இதேவேளை, புதிய அரசியலமைப்புக்கான வரைவினைத் தயாரிப்பதற்கு ஓராண்டு கால அவகாசத்தினை வழங்கியிருப்பதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment