நான் இராணுவ கட்டளைத் தளபதி என்ற வகையில் யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவேன் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

நான் இராணுவ கட்டளைத் தளபதி என்ற வகையில் யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவேன்

யாழ்.மாவட்டத்தின் புதிய இராணுவ கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் செனரத் பண்டார இன்று (சனிக்கிழமை) காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள இராணுவ கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில், இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.

மேலும், யாழ்.மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், “நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன் முதலாக இந்து மத குருவை சந்தித்திருக்கின்றேன். சந்திப்பில் மிகவும் ஆக்கபூர்வமானதாக பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேன்.

இராணுவத்தினர் ஆகிய எமது பிரதான நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். இந்த அரசாங்கமானது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்மொழிவுகளை மக்கள் சார்ந்து மேற்கொள்ள இருக்கின்றார்கள்

யாழ் மாவட்ட கட்டளை தலைமையகமானது வடக்கு மக்களுக்கு உதவி செய்வதற்கும் இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும்.

அத்தோடு எமது பிரதேசத்தில் சமாதானம் முக்கியமானது. இலங்கையர் அனைவரும் ஒரு நாட்டவர்கள்தான் என்ற கொள்கைக்கு இணங்க நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வசித்து வருகிறோம்.

இங்கே இரண்டு நாடுமில்லை இரண்டு நிர்வாகமும் இல்லை. இரண்டு இராணுவ கட்டமைப்பு என்ற கதைக்கும் இடமுமில்லை. ஆகவே, நான் இராணுவ கட்டளைத் தளபதி என்ற வகையில் யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவேன்” என தெரிவித்தார்

குறித்த சந்திப்பின் பின்னர் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி பின்னர் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment