(லியோ நிரோஷ தர்ஷன்)
சுய நல அரசியல் மீதுள்ள எண்ணங்களை கலைத்து விட வேண்டிய தருணம் தற்போது உருவாகியுள்ளது. 20 ஆது திருத்தத்தை முழுமையாக இல்தொழிக்க வேண்டிய மிகப் பாரிய பொறுப்பினை கையிலெடுத்துள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அத்துடன் அரசியல் பாரபட்சமற்ற வகையில் அனைத்து தரப்புகளினதும் ஒத்துழைப்பை கோரிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனநாயகத்தின் கூறுகளாக செயற்படக்கூடிய சுயாதீன அரச நிறுவனங்கள் மற்றும் ஆணைக்குழுக்களின் சுய அதிகாரத்தை மேலும் வலுப்படுத்த கூடிய வகையிலான 19 பிளஸ் திருத்தம் குறித்த அறிவிப்பையும் விடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் ஊடக நிறுவனங்களின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்தபோதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், 20 ஆவது திருத்தம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. இங்கு ஒரு நிலைப்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்களை ஜனநாயக செயற்பாடுகளை முற்றாக கட்டுப்படுத்தும் வகையிலேயே உள்ளது. எனவே இதனை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக வேடிக்கை பார்த்து விட முடியாது.
இதுவரை காலமும் பாதுகாக்கப்பட்டு வந்த ஜனநாயக ஆட்சி முறைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆகவேதான் 20 ஆது திருத்தத்தை இல்லாதொழிக்க தீர்மானித்துள்ள நாம் 19 ஆது திருத்தத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலான 19 பிளஸ் திருத்தத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் அரச கட்டமைப்புகள் அரசியல் தலையீடுகளின்றி சுயாதீனமாக தனக்குள்ள அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தி செயற்படக்கூடிய வகையிலான திருத்தங்கள் 19 பிளஸ் திருத்தத்தில் உள்வாங்கப்படும். இதனூடாக ஜனநாயகத்தின் மக்களாட்சி உறுதிப்படுத்தப்படும்.
தேசிய பாதுகாப்பு, தேசிய நல்லிணக்கம் மற்றும் இன, மத சமத்துவம் போன்ற விடயங்களை நாம் வலியுறுத்துகின்றோம். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 20 ஆவது திருத்த ஒழிப்பிற்கான எமது போராட்டத்தை குறுகிய அரசியல் நோக்காக ஊடகங்கள் சித்தரிக்க கூடாது என கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment