பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய மருத்துவ வல்லுநர் ஆர்.கேசவன் யோசனை முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான சிறப்புக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது வட மாகாணத்தில் கழிவகற்றல் விடயம் தொடர்பில் 3 ஆண்டுகளாகப் பேசி வருகின்றோம். ஆரம்பத்தில் இருந்து இந்த விடயங்களை மீளப்பார்க்க முடியாது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் சுகாதார மருத்துவ அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் இணைந்து தங்களுடைய பிரதேசங்களில் அதாவது உதாரணமாக யாழ்ப்பாண மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளனர்.
இதேபோல் நல்லூர், கோப்பாய் போன்ற பிரதேசங்களில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக வேண்டும். அதாவது எங்கிருந்து குப்பைகள் கொட்டப்படுகின்றன என்பதனை முதலில் அடையாளப்படுத்துங்கள். அதன் பின் உடனடியாக சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் அவர்களை கைது செய்யுங்கள்.
ஒவ்வொரு கிழமையிலும் மூன்று நாட்களை இதற்காக ஒதுக்குங்கள். கட்டாயமாக இதனை கட்டுப்படுத்த முடியும். பொலித்தீன் மற்றும் இதரக் கழிவுகளில் மட்டும்தான் இந்த டெங்கு பரவக் கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது. ஒவ்வொரு கிழமையும் இந்த வேலைத் திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலமே டெங்கு நுளம்பு பரவலைக் கட்டுப்படுத்த முடியும். என்றார்.
No comments:
Post a Comment