மகன் ஒருவர் தனது தாயாரின் கழுத்தில் கவ்வாத்து கத்திகளை வைத்து கழுத்தை வெட்டுவதாக அச்சுறுத்தி தாயின் கழுத்தில் போடப்பட்டிருந்த தங்க தாலியை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
எஹலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடகம்பல, திகோவ தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது சம்பந்தமாக தாயார் எஹலியகொடை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த 22 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தில் திகோவ தோட்டத்தில் தனது வேலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ஓய்வாக இருந்த தாயின் அருகில் சென்று சந்தேகநபர் எடுத்து வந்த கவ்வாத்து கத்தியை தனது தாயின் கழுத்தில் வைத்து அழுத்தி அந்தக் கத்தியினால் தாயின் கழுத்தில் இருந்த தங்க தாலியின் நூலை வெட்டி அதனை அபகரித்து சென்றுள்ளார்.
ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ள குறித்த இளைஞர், ஹெரோயின் போதைப் பொருளை பெற்றுக் கொள்ள பணம் கேட்டு தாயையும் தந்தையையும் தொந்தரவு செய்து வந்ததாகவும் பணம் கொடுக்காத சந்தர்ப்பங்களில் அவர்களை அச்சுறுத்தி பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பொலிசார் சந்தேகநபரை கைது செய்தவுடன் அபகரித்த தாலியையும் கவ்வாத்து கத்தியையும் மீட்டுள்ளனர். நபரை அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஹலியகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகருமான தினேஷ் குமாரசிங்க, குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி டப்ளியூ.ஏ.சி. கருணாரத்ன, உதவி பொலிஸ் பரிசோதகர் கபில சில்வா உட்பட பொலிஸ் அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(பலாங்கொடை நிருபர் - அப்துல் சலாம்)
No comments:
Post a Comment