ஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாட்டை எழுதிக் கொடுத்ததைப் போன்று கோட்டாபய ராஜபக்ஷ - மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காதென அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன் பதாதைகளையும் சபையில் ஏந்தியவாறு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 20 ஆவது திருத்தம் கொண்டு வந்தவுடன் நிறைவேற்றப்படாது. 14 நாட்களுக்குள் இதற்கெதிராக உங்களால் நீதிமன்றம் செல்ல முடியும். இதற்கு பின்னர் பாராளுமன்றில் விவாதங்கள் நடைபெற்றுத்தான் 20 நிறைவேற்றப்படும். இதனை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்.
சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டவுடன், இவ்வாறு செயற்படுவது பிழையான ஒரு உதாரணத்தையே வெளிக்காட்டுகிறது. பாராளுமன்ற சம்பிரதாயங்களை ஐக்கிய மக்கள் சக்தி புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் திருத்தங்களுக்கு செவிசாய்க்க நாம் தயாராகவே இருக்கிறோம்.
பதாதைகளை ஏந்தி பாராளுமன்றை அவமதிக்க வேண்டாம். அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பது நகைச்சுவைக்குரிய விடயமல்ல. பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்திற்கு இணங்க செயற்பட வேண்டும்.
17 மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டம் என்பன ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்ததான் கொண்டுவந்தார்கள். மாறாக நாட்டின் மீது அக்கறை கொண்டல்ல. நாம் இவை அனைத்தையும் உணர்வோம்.
2015 இல் வெற்றி பெற்று, எமது இராணுவத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் முற்பட்டீர்கள். அரச சொத்துக்களை விற்றீர்கள். இதனைத்தான் நீங்கள் கடந்த காலத்தில் செய்தீர்கள்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment